டெல்லியில் 1.2 லட்சம் போலி வாக்காளர்கள் – பாஜக, ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
டெல்லி: டெல்லியில் கிட்டத்தட்ட 1.2 லட்சம் போலி வாக்காளர்கள் இருப்பதாக பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
டெல்லியில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி அங்கு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி புயல் வேகத்தில் நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே லோக்சபா தேர்தலின் போதே அங்கு போலி வாக்காளர்கள் அதிகம் இருப்பதாக பாஜவும், ஆம் ஆத்மியும் மாறி மாறி குற்றம் சாட்டி வந்தன.
இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் காணப்படும் முறைகேடுகள் மற்றும் குறைகளை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக நேற்று அறிவித்தது.
வாக்காளர் பட்டியலில் காணப்படும் போலி வாக்காளர்களை நீக்க வேண்டும் என ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சி அளித்த புகாரின் பேரில் டெல்லி தேர்தல் ஆணையம் ஆய்வு நடத்தியது.
இதில் இரண்டு கட்சிகளும் அளித்த புகாரில் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரத்து 605 போலி வாக்காளர்கள் பட்டியலில் உள்ளனர் என்று சுட்டி காட்டியிருந்தனர்.
இதனை சுட்டி காட்டி டெல்லி தேர்தல் அதிகாரி, தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் இந்த இரண்டு கட்சிகளும் சுட்டி காட்டியிருந்ததையொட்டி சுமார் 89,017 குறைகள் களையப்பட்டு இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
டெல்லி தேர்தல் ஆணையம் கடந்த 5ம் தேதி வெளியிட்ட பட்டியலின் படி மொத்தம் 1 கோடியே 30 லட்சத்து 85 ஆயிரத்து 251 வாக்காளர்கள் உள்ளனர். போலிகளை கண்டறிந்து நீக்கும் மென்பொருள் மூலமாக ஒருவருக்கே ஒன்றுக்கு மேற்பட்ட அடையாள அட்டைகள் இருந்தால் அதனை அடையாளம் கண்டு அழிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதில் சுமார் 3 லட்சம் பேருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வாக்காளர் அடையாள அட்டை மற்றும் வாக்கு பதிவில் முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு சுமார் ஓராண்டு வரை சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது.
எனவே போலி அடையாள அட்டைகளை உருவாக்க நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications