பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி உயர்வுக்கு எதிர்ப்பு- டெல்லியில் காங்., பா.ஜ.க. போராட்டம்
டெல்லி: பெட்ரோல், டீசல் விலை மீதான மதிப்பு கூட்டு வரி உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சியினர் இன்று போராட்டம் நடத்தினர்.
பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி உயர்வால் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.78-ம், டீசல் ரூ.1.83-ம் உயர்ந்துள்ளது. ஆம் ஆத்மி அரசின் இந்த நடவடிக்கைக்கு மாநிலம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இந்த உயர்வுக்குக் கண்டனம் தெரிவித்து இன்று காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் தனித்தனியாக போராட்டம் நடத்தினர். முதல்வர் கெஜ்ரிவால் வீட்டை நோக்கி இளைஞர் காங்கிரசார் கண்டன பேரணி நடத்தினர். ஆனால் கெஜ்ரிவால் வீட்டு முன்பு குவிக்கப்பட்டிருந்த ஏராளமான போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இதனிடையே மாநில தலைமை செயலகம் முன் பாரதிய ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் மீது போலீசார் தண்ணீரை பீய்ச்சியடித்து கலைத்தனர்.
இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆம் ஆத்மி அரசு டெல்லி மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டதாக இரு கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.