கோலாகலமாக தயாராகும் ராம்லீலா மைதானம்!... காய்ச்சலில் அவதிப்படும் கெஜ்ரிவால்!!
டெல்லி: பதவியேற்பு விழாவிற்கு ராம்லீலா மைதானம் பரபரப்பாக தயாராகி வரும் நிலையில் 101 டிகிரி காய்ச்சலில் அவதிப்படுகிறார் விழா நாயகன் அர்விந்த்கெஜ்ரிவால்.
டெல்லி முதல்வராக நாளை பதவியேற்கவுள்ள அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு இன்னும் காய்ச்சல் சரியாகவில்லை என ஆம் ஆத்மி கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லியின் முதல்வர் வேட்பாளருமான கெஜ்ரிவால் கடந்த நான்கு நாட்களாக காய்ச்சலில் அவதிப்பட்டு வருகிறார்.
தேர்தல் முடிவுகள் வெளியான நாளன்று கூட சிறிது நேரமே பேசினார் கெஜ்ரிவால் அதிகமாக இருமினார். பின்னர் தனது வீட்டிற்கு வந்த கெஜ்ரிவாலுக்கு காய்ச்சல் அதிகமானது.
101 டிகிரி காய்ச்சல்
அவரது உடல்நிலையை பரிசோதனை செய்த குடும்ப டாக்டர் விபின் மிட்டேல், 101 டிகிரி காய்ச்சல் மற்றும் சளியால் அவதிப்படும் கெஜ்ரிவால் ஓய்வு எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். மப்ளரை கழற்றியதே அவருக்கு சளி, காய்ச்சல் அதிகரிக்க காரணமாகிவிட்டது என்று மருத்துவர் தெரிவித்துள்ளார்.
பிரதமருடன் சந்திப்பு
காய்ச்சல் இருந்தாலும் பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்தார். இன்னும் ஒருசில சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஆனால், கெஜ்ரிவால் உடல்நலத்தைக் குறித்தே அவரது நிகழ்ச்சிகள் திட்டமிடப்படும்" என ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தயாராகும் மைதானம்
இதனிடையே பதவியேற்பு விழா நடைபெற உள்ள ராம்லீலா மைதானம் கோலாகலமாக தயாராகிவருகிறது. மைதானத்தில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. 50000 நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. 1லட்சம் பேர்வரை திரள்வார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அமைச்சரவை பட்டியல்
கடந்த முறை முதல்வராக பதவியேற்ற போதும் பேசிய கெஜ்ரிவால் அதிகம் இருமினார். இம்முறையும் காய்ச்சலாம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரது உடல்நலம் குறித்து கவலையடைந்துள்ளனர் ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள்.
இதற்கிடையே ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள் புதிய அமைச்ரவை பட்டியல் குறித்து கெஜ்ரிவாலிடம் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.