காதல் திருமணம் செய்த மகளை கவுரவக் கொலை செய்த பெற்றோர்: டெல்லியில் பயங்கரம்!
டெல்லி தென்மேற்கு பகுதியான கக்ரோலாவில் பாரத் விகார் என்ற இடத்தைச் சேர்ந்தவர் ஜக் மோகன் யாதவ். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் மோகனின் மகளான பாவனா, டெல்லி வெங்கடேஷ்வரா பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம் இறுதி ஆண்டு படித்து வந்தார்.
கடந்த சில ஆண்டுகளாக பாவனா, அபிஷேக்சேத் (24) என்ற அரசு ஊழியரைக் காதலித்து வந்துள்ளார். அபிஷேக் வேறு பிரிவைச் சேர்ந்தவர் என்பதால், பாவனாவின் காதலுக்கு அவரது பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளனர்.
காதல் திருமணம்:
இதனால், பெற்றோருக்குத் தெரியாமல் கடந்த 12ம் தேதி டெல்லி ஆர்ய சமாஜ் கோவிலில் பாவனாவும், அபிஷேக்கும் திருமணம் செய்து கொண்டனர். இத்திருமணத்திற்கு அபிஷேக்கின் பெற்றோர் சம்மதம் தெரிவித்து, புதுமண தம்பதியை ஏற்றுக் கொண்டனர்.
ஆனால், மகளின் திடீர் திருமணத்தால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், அபிஷேக்கின் வீட்டிற்கு சென்று சமாதானம் பேசியுள்ளனர். விரைவில் உறவினர்கள் முன்னிலையில் தடபுடலாக திருமணம் செய்து வைக்கிறோம் எனக் கூறி, ஏமாற்றி அபிஷேக்கிடம் இருந்து பிரித்து பாவனாவை தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
வீட்டிற்கு வந்ததும் மகளிடம் காதல் திருமணத்தை ஏற்க மாட்டோம் என்று கூறி எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர் மோகனும், அவரது மனைவியும். ஆனால், அபிஷேக்கை மறக்க முடியாது என பாவனா திட்டவட்டமாகக் கூறவே, ஆத்திரத்தில் அவரை பெற்றோர் அடித்துள்ளனர்.
சித்ரவதை செய்து கொலை:
இதில் பரிதாபமாக பாவனா உயிரிழந்தார். உடனடியாக உறவினர்கள் உதவியோடு பாவனாவின் சடலத்தை ராஜஸ்தானில் உள்ள தங்களது சொந்த ஊருக்கு எடுத்துச் சென்று எரித்துள்ளனர்.
இதற்கிடையே பாவனாவின் மரணம் குறித்து தகவலறிந்த அபிஷேக், இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தார். கொலை வழக்கைப் பதிவு செய்த போலீசார் பாவனாவின் பெற்றோரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாவனாவின் மரணம் தொடர்பாக, அவரது வீட்டின் பக்கத்தில் வசிப்பவர்கள் கூறும்போது, ‘‘பாவனாவை பெற்றோர் கொடூரமாக சித்ரவதை செய்தனர். பாம்பை விட்டு கடிக்க வைத்தனர்' எனத் தெரிவித்துள்ளனர்.
போலீஸ் விசாரணை:
இது தொடர்பாக அபிஷேக் கூறுகையில், ‘‘பாவனாவை திருமணம் செய்ததால் எங்களை கொலை செய்து விடுவோம் என்று அவளது பெற்றோரும், உறவினர்களும் மாறி மாறி மிரட்டினார்கள். பாவனாவை ஏமாற்றி அழைத்துச் சென்று மனம் மாற்றம் செய்ய முயன்றனர். அது முடியாததால் கொன்று விட்டனர்'' என கண்ணீருடன் கூறியுள்ளார்.
பாவனாவின் உடலை அவரது பெற்றோர் எரித்து விட்டதால், மரணத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக தெரிவித்துள்ள போலீசார், ‘உறவினர்கள் முன்னிலையில் தங்களை தலைகுனிய செய்ததால், மகளை கொன்றதாக பாவனாவின் பெற்றோர் வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.