ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: குற்றம்சாட்டப்பட்டோருக்கு சம்மன் அனுப்புவது குறித்து அக். 29ந் தேதி முடிவு

ஏர்செல் பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய மத்திய அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் வற்புறுத்தினார். இதற்கு ஆதாயமாக தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதிக்கு சொந்தமான சன் டைக்ரட் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்தது என்பது சிபிஐ வழக்கு.
இந்த வழக்கில் அண்மையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இக்குற்றப்பத்திரிகையில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன், மலேசியாவின் மேக்சிஸ் நிறுவன உரிமையாளர் அனந்தகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்வது மற்றும் குற்றம்சாட்டப்பட்டோருக்கு சம்மன் அனுப்புவது குறித்து டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
அப்போது மேக்சிஸ் நிறுவனத்தின் முதலீட்டுக்கு அனுமதி அளித்த மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் பங்கு குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை இன்றும் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது இந்த வழக்கில் மேலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சிபிஐ வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்பது குறித்தும் அதன் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்டோருக்கு சம்மன் அனுப்புவது குறித்து வரும் 29-ந் தேதி முடிவு செய்யப்படும் என்று நீதிபதி சைனி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications