யோகா தினத்தில் தேசிய கொடியை துண்டாக பயன்படுத்திய மோடி... டெல்லி கோர்ட்டில் வழக்கு
டெல்லி: சர்வதேச யோகா தினத்தின் போது தேசியக் கொடியை கழுத்தில் துண்டாக அணிந்து, அதனை அவமதித்ததாக பிரதமர் மோடி மீதான வழக்கை டெல்லி நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது.
ஆண்டுதோறும் மே மாதம் 21ம் தேதி சர்வதேச யோகா தினமாகக் கொண்டாடப்படும் என ஐநா அறிவித்துள்ளது. அதன்படி, கடந்தாண்டு முதல் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
டெல்லி ராஜபாதையில் நடைபெற்ற யோகா தினக் கொண்டாட்டம் பிரதமர் மோடி தலைமையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், 35 ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது தேசியக் கொடி வண்ணத்திலான சிறிய துண்டை கழுத்தில் அணிந்திருந்தார் மோடி. அதனை அவர் வியர்வையைத் துடைக்க பயன்படுத்துவது போன்ற போட்டோக்கள் இணையத்தில் வெளியானது.
இது தேசியக் கொடியை அவமதிக்கும் செயல் என மோடிக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன. இது தொடர்பாக ஆஷிஸ் நெஹ்ரா என்பவர் டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ‘‘தேசிய கொடியை அவமரியாதை செய்வதில் பிரதமர் அலட்சியமாக இருப்பது முதல் முறையல்ல. இதற்கு முன்னர் கடந்த ஆண்டில் பிரதமர் அமெரிக்கா சென்றபோது அதிபர் ஒபாமாவை சந்தித்துபேசினார். அப்போது இந்திய தேசியக்கொடியின் மீது கையெழுத்திட்டு அதனை ஒபாமாவிடம் ஒப்படைத்தார். இது தேசிய அவமரியாதை சட்டம் 1971ன் கீழ் இந்திய தேசியக்கொடியினை கையாளும் நடைமுறையை மீறிய குற்றமாகும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த மனுவை மாஜிஸ்திரேட் சினிக்தா சர்வாரியா விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளார். குற்றச்சாட்டுக்குரிய ஆதாரங்களை வாக்குமூலமாக பதிவு செய்ய அவர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை மே மாதம் 9ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.