டெல்லி தேர்தல்: யமுனை நதியில் நச்சு- கெஜ்ரிவாலுக்கு எதிராக பாஜக, காங்கிரஸ்! தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
டெல்லி: டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலின், யமுனை நதியில் ஹரியானா பாஜக அரசு நச்சை கலந்துவிடுவதாக முன்வைத்த குற்றச்சாட்டு பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆம் ஆத்மிக்கு எதிராக பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கை கோர்த்துள்ளன. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் உரிய ஆதாரங்களை வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையமும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் யமுனை நதியில் நச்சு கலப்பது தொடர்பான விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால் பேசியது என்ன?
டெல்லி தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், யமுனை நதியில் ஹரியானாவில் ஆளும் பாஜக அரசுதான் நச்சை கலந்து மாசடைய வைத்துள்ளது என குற்றம்சாட்டினார்.
தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்
அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த புகாரை தேர்தல் பிரசார ஆயுதமாக பாஜக கையிலெடுத்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் செய்துள்ளது. டெல்லியில் நேற்று தேர்தல் பிரசாரம் செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், யமுனை நதியில் நச்சை ஹரியானா பாஜக அரசு கலந்துவிட்டது என்பதற்கு என்ன ஆதாராத்தை தருவார் அரவிந்த் கெஜ்ரிவால் என கேள்வி எழுப்பி இருந்தார்.
பாஜகவுக்கு காங்கிரஸ் ஆதரவு
அரவிந்த் கெஜ்ரிவாலின், யமுனை நதியில் ஹரியானா பாஜக அரசு நச்சை கலந்துவிட்டது என்பது தொடர்பான பேச்சு விவகாரத்தில் பாஜகவை போல ஆதாரங்களை கேட்கிறது காங்கிரஸ். டெல்லியில் தேர்தல் பிரசாரம் செய்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, யமுனை நதி விவகாரத்தில் கெஜ்ரிவால் உரிய ஆதாரங்களை வெளியிட வேண்டும் என்றார்.
கெஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணயம் நோட்டீஸ்
இதனிடையே, இரண்டு மாநிலங்களுக்கு இடையே பகைமையை உருவாக்கும் பேசிய பேச்சு தேர்தல் நடத்தை விதிமீறலாகும். இது தொடர்பான உரிய ஆதாரங்களை அரவிந்த் கெஜ்ரிவால் வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையமும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது
தேர்தல் ஆணையத்தில் ஆம் ஆத்மி
இந்த பின்னணியில் தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி முதல்வர் அதிஷி தலைமையிலான ஆம் ஆத்மி குழு இன்று சென்றது. அரவிந்த் கெஜ்ரிவாலின் யமுனை நதி குறித்த பேச்சுக்கு ஆம் ஆத்மி சார்பில் விளக்கம் தரப்பட்டுள்ளதாக முதல்வர் அதிஷி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications