நிர்பயா பலாத்கார குற்றவாளி வினய் சர்மாவை அடித்து துவைத்த கைதிகள்... கால் உடைந்தது
டெல்லி: மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார வழக்கு குற்றவாளி வினய் சர்மாவை திகார் சிறையில் சக கைதிகள் தாக்கி கொடூரமாக கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர். கைதிகள் தாக்கியதில், வினய் சர்மாவின் இடது கை, காலில் எலும்புமுறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2012 டிசம்பர் 16ம் தேதி, டெல்லியில் ஓடும் பேருந்தில், 23 வயது இளம்பெண் (நிர்பயா) 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பான வழக்கில், அக்ஷய் தாக்குர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் ஆகிய 4 பேருக்கு மரணத் தண்டனை விதிக்கப்பட்டு, அவர்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பான அவர்களின் மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த அதே பேருந்தில் பயணம் செய்த அதே பேருந்தில், ராம் ஆதர் என்ற தச்சரை கடத்தியது தொடர்பாக வினய் சர்மா உள்ளிட்ட 4 பேர் மீது தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணை, டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வினய் சர்மாவை, சக கைதிகள் கொடூரமாக தாக்கியதாக டெல்லி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.இதுகுறித்து வினய் சர்மாவின் வக்கீல் ஏ.பி.சிங், டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை, வினய் சர்மாவை சக கைதிகள் 6 பேர் மிகவும் கொடூரமாக தாக்கியுள்ளனர். மேலும் அவரை கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர். கைதிகள் தாக்கியதில், வினய் சர்மாவின் இடது கை, காலில் எலும்புமுறிவு ஏற்பட்டுள்ளது என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக, வரும் 25ம் தேதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யுமாறு சிறை நிர்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது' என்று அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
மாணவி பலாத்கார கொலை வழக்கில் சிக்கிய 6 பேரில் ராம் சிங் தற்கொலை செய்து கொண்டான். வினய் சர்மா கடந்த 2013ம் ஆண்டு விமானப்படையின் கிளார்க் தேர்வுக்கு விண்ணப்பிருந்தான். அவன் தேர்வு எழுதப்போகும் போது சக கைதிகள் வினய் சர்மாவை தாக்கி வலது கையை உடைத்ததாகவும் புகார் எழுந்தது.