கொடூரமான டிசம்பர் 16 முதல் இன்று வரை... டெல்லி பாலியல் பலாத்கார வழக்கு ஒரு பார்வை
டெல்லி: 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி இரவு நாட்டையே உலுக்கிய படு பாதகமான டெல்லி பாலி்யல் பலாத்கார வழக்கில் இன்று நான்கு குற்றவாளிகளுக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 12ம் தேதி இரவு நடந்த அந்த அக்கிரமச் சம்பவத்தின் ஒரு பார்வை...
டிசம்பர் 16 - 23 வயதான பாராமெடிக்கல் கல்லூரி மாணவி தனது நண்பருடன் இரவில் டெல்லியில் பேருந்தில் பயணித்தார். பாதி வழியிலேயே பேருந்தில் இருந்த 6 பேர் கொண்ட கும்பல் அந்த மாணவியை மிகக் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்தது. பின்னர் அந்த மாணவியையும், அவருடன் வந்த நண்பரையும் அடித்து வெளியே தூக்கிப் போட்டு விட்டுப் போய் விட்டனர்.
டிசம்பர் 17 -அடுத்த நாள் நான்கு குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர். ராம்சிங், அவரது சகோதரர் முகேஷ், வினய் சர்மா, பவன் குப்தா ஆகியோர் அவர்கள்.
டிசம்பர் 18 - ராம்சிங்கும் மற்ற மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர்.
டிசம்பர் 21- இந்த சம்பவத்தில் மிகவும் கொடூரமாக நடந்து கொண்ட, மாணவியை 2 முறை பலாத்காரம் செய்தும், இரும்புக் கம்பியால் கொடூரமாகவும் தாக்கியவனான 5வது குற்றவாள டெல்லி ஆனந்த் விஹார் பேருந்து நிலையத்தில் கைது செய்யப்பட்டான். இவன் மைனர் சிறுவன் என்று பின்னர் போலீஸார் அறிவித்தனர்.
டிசம்பர் 22- 6வது குற்றவாளியான அக்ஷய்தாக்கூர் பீகாரில் வைத்துப் பிடிபட்டான்.
டிசம்பர் 26 - மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவியை, சிங்கப்பூர் மெளன்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு மாற்ற அரசு முடிவு செய்தது.
டிசம்பர் 29 - மாணவி சிங்கப்பூர் கொண்டுவரப்பட்ட நிலையில்அதிகாலை 2.15 மணியளவில் உயரிழந்தார்.
ஜனவரி 3,2013 - மைனர் சிறுவன் தவிர மற்ற ஐந்து குற்றவாளிகள் மீதும் போலீஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
ஜனவரி 7 - கோர்ட்டில் விசாரணை தொடங்கியது.
ஜனவரி 17 - வழக்கு விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. விசாரணை உடனடியாக தொடங்கியது.
பிப்ரவரி 2- ஐந்து குற்றவாளிகள் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
மார்ச் 11 - குற்றவாளிகளில் ஒருவனான ராம்சிங் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டான்.
மார்ச் 22 - கோர்ட் விசாரணையை மீடியாக்கள் பார்வையிட்டு செய்தி சேகரிக்க டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதித்தது.
ஆகஸ்ட் 22 - இறுதி விவாதம் தொடங்கியது.
ஆகஸ்ட் 31 - இளம் குற்றவாளிகளுக்கான கோர்ட், மைனர் சிறுவனக்கு 3 ஆண்டு சிறார் சீர்திருத்தப் பள்ளியில் தங்க வைக்கும் தண்டனையை அறிவித்தது.
செப்டம்பர் 3 - செப்டம்பர் 10ம் தேதிக்கு விரைவு நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது.
செப்டம்பர் 10 - குற்றம் சாட்டப்பட்ட நால்வரும் குற்றவாளிகள் என்றும் அவர்கள் மீதான 13 குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் கோர்ட் தீர்ப்பளித்தது.
செப்டம்பர் 11- செப்டம்பர் 13ம் தேதி நால்வருக்குமான தண்டனை குறித்த விவரத்தை அறிவிப்பதாக நீதிபதி அறிவித்தார்.
செப்டம்பர் 13 - இன்று நால்வருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
130 விசாரணைகள்
இந்த விசாரணையின்போது மொத்தம் 130 அமர்வுகள் இடம் பெற்றன. 85 அரசுத் தரப்பு சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். குற்றவாளிகள் தரப்பில் 17 சாட்சிகள் விசாரிக்கப்ப்டன.