நவீன தொழில்நுட்பத்துடன் காற்று மாசை நீக்கும் முயற்சி தோல்வி – டெல்லி மக்கள் அவதி
டெல்லி: காற்று மாசுப்பாட்டால் தலைநகரத்தில் உள்ள மக்கள் கடந்த பல மாதங்களாக பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வாகன போக்குவரத்துக்கு தடை, பள்ளி மற்றும் அலுவலங்களுக்கு விடுமுறை, தொழிற்சாலைகளுக்கு சீல் என்று பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் காற்று மாசின் அளவு அதிகரித்துக்கொண்டே வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அரசு அதிகாரிகள் செய்வது அறியாமல் தவித்து வருகின்றனர்.
குறிப்பாக தீபாவளியிலிருந்து டெல்லி புகைமூட்டமகாவே காணப்படுவதாகவும், இதனால் நெடுஞ்சாலைகளில் நூற்றுக்கணக்கான விபத்துகளும் நிகழ்வதாக கூறப்படுகிறது.
இந்தநிலையை மாற்ற டெல்லி அரசு நவீனமுறையில் காற்று மாசை கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியது. அதாவது ANTISMOG GUN எனப்படும் காற்றில் நீரை தெளிக்கும் முறையை சோதனை செய்து பார்க்க டெல்லி அரசு முடிவு செய்தது.
புழுதி நிறைந்த காற்றில் இவ்வாறு ஈரப்பதத்தை கூட்டினால், புழுதி நீரில் கலந்து காற்று மாசுப்பாட்டின் அடர்த்தி குறையும் என்பது இந்த தொழில்நுட்பத்தின் ரிசல்ட். இதன்படி காற்று மாசு அதிகமுள்ள இடமாக கருதப்படும் ஆனந்த் விஹார் பகுதியில் இந்த சோதனை நேற்று நடத்தப்பட்டது.
ஆனால் இந்த சோதனை முயற்சிக்கு பின்னும் காற்றில் மாசின் அளவு குறையாததால், இந்த முயற்சி தோல்வியில் முடிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.