சென்னை ஏர்போர்ட்டில் அமெரிக்க பெண்ணுக்கு அநீதி.. இரவு 7.30 மணிக்கு வழக்கை விசாரித்த டெல்லி ஹைகோர்ட்
Recommended Video
டெல்லி: புதுச்சேரியை சேர்ந்த பெண்ணுக்காக இரவு 7.30 மணிக்கு டெல்லி ஹைகோர்ட் அவசரமாக ஒரு வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது நீதித்துறையில் பரபரப்பு பேசு பொருளானது.
புதுச்சேரியில் 'காஷா கி ஆஷா' என்ற பெயரில் கலை பொருட்கள் கடை மற்றும், கஃபே நடத்தி வருபவர் காஷா வந்தே (48).
பாண்டிஆர்ட்டின் நிறுவனரும் இவர்தான். 2013ல் பாண்டி ஆர்ட் அமைப்பை ஏற்படுத்திய இவர், இதன் மூலம், பொதுமக்கள் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
சென்னை விமான நிலையம்
10 வருடங்களுக்கும் மேலாக புதுச்சேரியில் தங்கியுள்ள அமெரிக்க பிரஜையான இவர், பல்வேறு வர்த்தக விசாக்களை வைத்துள்ளார். இந்த நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் காஷா தடுக்கப்பட்டார்.
திரும்பிப்போக கூறிய அதிகாரிகள்
அமெரிக்காவுக்கே அவர் திரும்பிச் செல்லுமாறு அதிகாரிகள் கூறினர். அவரது கோப்பில் சில குறைபாடுகள் இருப்பதாகவும், இதனால்தான் அவரை திரும்பிப்போக சொல்வதாகவும், குடியுரிமை அதிகாரிகள் காரணம் கூறினர்.
ஹைகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு
இதையடுத்து தனது வழக்கறிஞர் கம்லேஷ் கே மிஷ்ராவை தொடர்பு கொண்டு சம்பவங்கள் குறித்து விளக்கினார் காஷா. அவர் டெல்லி ஹைகோர்ட்டில் இதுதொடர்பாக ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மாலை 6 மணிக்கு ஹைகோர்ட் வழக்கு பட்டியலில் சேர்க்கப்பட்டது. இதற்கு ஹைகோர்ட் தலைமை நீதிபதி அனுமதி வழங்கினார்.
இரவு விசாரணை
இதையடுத்து நீதிபதிகள் முரளிதர் மற்றும் ஐ.எஸ்.மேத்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அமைக்கப்பட்டது. கோர்ட் நேரம் முடிந்த பிறகும், இரவு 7.30 மணிக்கு விசாரணை நடத்திய நீதிபதிகள், காஷாவை தேவையில்லாமல் பிடித்து வைத்ததாக வந்துள்ள புகார் குறித்து பதில் அளிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் குடியுரிமைப் துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். திங்கள்கிழமைக்குள் பதிலளிக்க நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.