ஜேஎன்யூ விவகாரம்: கன்னையா குமார் ஜாமீன் மனு மீது நாளை தீர்ப்பு!
டெல்லி: டெல்லி ஜேஎன்யூ மாணவரான கன்னையா குமார் தேச விரோத வழக்கில் கைதான நிலையில் அவருடைய ஜாமீன் மனு மீதான தீர்ப்பு நாளை வெளியாக உள்ளது.
தற்போது நீதிமன்ற காவலில் இருக்கும் கன்னையாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை நீதிபதி பிரதீபா ராணி முன் நேற்று நடைபெற்றது. அப்போது, கன்னையா குமார் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதிட்டார்.

அப்போது அவர், "மாணவர் கன்னையா குமார் தேச விரோத கோஷங்களை எழுப்பவில்லை. முகமூடி அணிந்திருந்த சில நபர்கள் தான் அந்த கோஷங்களை எழுப்பியுள்ளனர். அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததில் கன்னையாவுக்கு தொடர்பிருப்பதாக எந்த ஆதாரமும் இல்லை" என்று தெரிவித்தார்.
இதனையடுத்து அரசு தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா , "பயங்கரவாதி அப்சல் குரு படத்தை ஏந்தி கன்னையா குமார் தேச விரோத கோஷங்களை எழுப்பியதை சாட்சிகள் மூலம் உறுதி செய்துள்ளோம். உளவுத்துறை, டெல்லி காவல்துறை விசாரணையிலும், கன்னையா குமார் மீதான குற்றச்சாட்டு உறுதியானது" என்று தெரிவித்துள்ளார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கன்னையா குமார் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications