கோர்ட் அறிவுரையைத் தொடர்ந்து... ஜாமீனில் வெளிவர கெஜ்ரிவால் சம்மதம்
டெல்லி: நீதிமன்ற அறிவுரையைத் தொடர்ந்து ஜாமீன் பத்திரம் எழுதித் தர சம்மதம் தெரிவித்துள்ளார் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்.
டெல்லி மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் மீது பாஜக தலைவர் நிதின் கட்காரி தொடர்ந்த அவதூறு வழக்கு கடந்த 21-ந்தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதியின் உத்தரவின்படி ஜாமீன் பத்திரம் எழுதித் தர மறுத்ததால், அவரை 23-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் 23-ந்தேதியும் இதே நிலை நீடித்ததால் அடுத்த மாதம் (ஜூன்) 6-ந்தேதி வரை அவரது காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், நேற்று வக்கீல் பிரசாந்த் பூஷன் டெல்லி ஹைகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், கெஜ்ரிவாலை நீதிமன்றக்காவலில் சிறையில் அடைத்தது சட்ட விரோதமானது என்றும், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
இதை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள் பி.டி.அகமது மற்றும் எஸ்.மிரிதுல் ஆகியாரைக் கொண்ட அமர்வு, இந்த மனு மீது நாளை விசாரணை நடைபெறும் என அறிவித்தனர். இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று வந்தது.
அப்போது மீண்டும் கெஜ்ரிவால் ஜாமீன் பத்திரம் எழுதித் தர வேண்டும் என்பதையே கோர்ட் வலியுறுத்தியது. மேலும், ஜாமீனில் வெளியே வந்ததும், மாஜிஸ்திரேட் கோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்யலாம் என்றும் பெஞ்ச் உத்தரவிட்டது.
அதேசமயம், நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கெஜ்ரிவால் தரப்பில் எப்படி ஹேபியஸ் கார்பஸ் மநனு தாக்கல் செய்யலாம் என்றும் கோர்ட் கேள்வி எழுப்பியது. ஒரு கைதி அல்லது காணாமல் போனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரித்தான் வழக்கமாக ஹேபியஸ் கார்பஸ் மனு செய்ய முடியும். ஒருவர் சட்டப்பூர்வமான காவலில் இருக்கிறாரா என்பதை உறுதி செய்யவே இந்த மனுவைத் தாக்கல் செய்ய முடியும். ஆனால் கெஜ்ரிவாலுக்கு எப்படி இது பொருந்தும் என்று கேட்டது. அதற்கு கெஜ்ரிவால் வக்கீல் பதிலளிக்கையில், கெஜ்ரிவால் கைது முழுக்க முழுக்க சட்டவிரோதமானது என்று வாதிட்டார்.
அதனைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சட்ட அறிவுரை தேவை எனத் தெரிவித்த நீதிபதிகள், ‘இது ஒரு சிறிய விவகாரம் இதை ஏன் கெஜ்ரிவால் பெரிது படுத்துகிறார் என்றும் இதை தன்மான பிரச்சினையாக கெஜ்ரிவால் கருதக்கூடாது என்றும் அறிவுரை வழங்கினர்.
இந்நிலையில், கோர்ட் அறிவுரையைத் தொடர்ந்து தற்போது ஜாமீன் பத்திரம் எழுதித் தர கெஜ்ரிவால் சம்மதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.