ஆராய்ச்சி மாணவி தற்கொலை...டெல்லி ஐ.ஐ.டி.யில் அதிர்ச்சி சம்பவம்
ஐ.ஐ.டி. என்றாலே தற்கொலை சம்பவங்கள் அதிகம் நடக்கும் கல்வி நிறுவனம் என்ற நிலை இருப்பதை மேலும் ஒரு மாணவியின் தற்கொலை சம்பவம் உறுதிப்படுத்தியுள்ளது.
டெல்லி: மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் மஞ்சுளா தேவக். 29 வயதான இவர் டெல்லி ஐ.ஐ.டி. கல்வி மையத்தில் பிஎச்.டி. இறுதியாண்டு படித்து வந்தார். ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்த அவர், நேற்று இரவு திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மஞ்சுளா தேவக் அறைக்கு மற்றொரு மாணவி சென்றபோது, விடுதி அறையில் உள்ள மின்விசிறியில் அவர் பிணமாகத் தொங்கியது கண்டு அதிர்ச்சியடைந்த அவர் மற்றவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி காவல் நிலையத்திற்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து போலீசார் வந்து மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணையம் நடத்தி வருகின்றனர்.
இறந்துபோன மாணவியின் அறையில் தற்கொலைக் குறிப்பு எதுவும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. எனினும்,படிப்பு தொடர்பான மன அழுத்தமே அவரை தற்கொலைக்கு தூண்டியிருக்கலாம் என்று வழக்கம்போல் ஒரு தகவல் கூறப்படுகிறது.
மாணவி மஞ்சுளா தேவக் திருமணமானவர். அவரின் மரணம் குறித்து போபாலில் உள்ள அவரின் கணவர் மற்றும் மாமனார், மாமியார் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.