இரட்டை இலைக்கு லஞ்சம்.. இன்று மாலை டெல்லி போலீஸ் முன்பு டிடிவி தினகரன் மீண்டும் ஆஜராக உத்தரவு
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த விவகாரம் தொடர்பாக இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் ஆஜராக தினகரனுக்கு டெல்லி போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
டெல்லி: அதிமுகவின் இரட்டை இலை சின்னம் பெற ரூ.50 கோடி பேரம் பேசிய விவகாரம் தொடர்பாக டிடிவி தினகரனிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் ஆஜராக உத்தவிட்டுள்ளனர்.
ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு அதிமுக இரண்டாக பிளவு பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின் போது இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதில் சிக்கல் ஏற்பட்டது.

சசிகலா அணி, ஓபிஎஸ் அணி ஆகிய இரு அணிகளும் கட்சியின் சின்னத்திற்கு உரிமை கோரின. அடுத்து இரட்டை இலை சின்னம், கட்சி பெயரை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்துள்ளது. இரு தரப்பினரும் தங்கள் வசம் உள்ள ஆவணங்களை சமர்பிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 17ஆம் தேதி பெங்களூருவை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவரை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1.30 கோடி ரொக்கத்தையும் கைப்பற்றினர்.
இதையடுத்து, போலீசாரின் விசாரணையில் இரட்டை இலை சின்னத்தை சசிகலா அணிக்கு ஒதுக்க வேண்டும் என்பதற்காக, ரூ.50 கோடி பேரம் பேசப்பட்டதாகவும், அதில் முன் பணமாக ரூ.1.30 கோடியை டிடிவி தினகரன் கொடுத்ததாகவும் சுகேஷ் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். இதனால், டிடிவி தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து, டெல்லி போலீஸ் அடையாறில் இருக்கும் டி.டி.வி.தினகரன் வீட்டுக்கு நேரில் வந்து விசாரணைக்கான சம்மனை கொடுத்துச் சென்றனர். அதன்படி டெல்லி குற்றப்பிரிவு போலீசார் முன்னிலையில் தினகரன் நேற்று முன்தினம் நேரில் ஆஜரானார். அப்போது, அவரிடம் போலீசார் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து, டெல்லி குற்றப்பிரிவு போலீசார் முன்னிலையில், டிடிவி தினகரன் நேற்று மீண்டும் ஆஜரானார். நேற்று பிற்பகல் 2 மணிக்கு ஆஜரான அவரிடம் நள்ளிரவு 12.30 மணி வரை விசாரணை நடத்தப்பட்டது. சுமார் 10 மணிநேரம் நடைபெற்ற அந்த விசாரணையின் போது, பல்வேறு கேள்விகளை முன்வைத்து டெல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டதாக தெரிகிறது.
இந்நிலையில், இன்று மாலை 4 மணிக்கு, டிடிவி தினகரன் மீண்டும் ஆஜராக வேண்டும் என டெல்லி குற்றப்பிரிவு போலீசார் உத்தரவிட்டுள்ளனர். தினகரனின் நண்பர் மல்லிகார்ஜுனா மற்றும் உதவியாளர் ஜனார்தணனும் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications