இரட்டை இலையை பெற லஞ்சம்: டிடிவி தினகரனின் வக்கீலிடம் டெல்லி போலீஸ் விசாரணை!
இரட்டை இலையை பெற லஞ்சம் கொடுத்த விவகாரம் தொடர்பாக டிடிவி.தினகரனின் வக்கீல் குமாரிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லி: இரட்டை இலையை பெற லஞ்சம் கொடுத்த விவகாரம் தொடர்பாக டிடி.தினகரைனின் வழக்கறிஞர் குமார் டெல்லி போலீசாரிடம் ஆஜராகியுள்ளார். லஞ்சம் கொடுத்தது தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிமுகவின் இரு அணிகளும் இரட்டை இலைச் சின்னத்துக்கு போட்டி போட்டதால் தேர்தல் ஆணையம் இரட்டை இலையை முடக்கியது. இதுதொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க சுகேஷ் சந்திரா மூலம் முயன்றதாக டிடிவி தினகரன் மீது டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்தது.
வக்கீலுக்கும் உத்தரவு
சுகேஷ் சந்திரசேகரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து டிடிவி தினகரனையும் விசாரணைக்கு ஆஜராக டெல்லி போலீஸ் உத்தரவிட்டு இருந்தது.
டிடிவி.தினகரன் மீண்டும் முன்னிலை
அவரும் கடந்த 3 நாட்களாக ஆஜராகி டெல்லி போலீஸ் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வந்துள்ளார். இந்நிலையில் டெல்லி குற்றப்புலனாய்வு பிரிவு காவல்நிலையத்தில், தினகரன் இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
வக்கீலுக்கும் நண்பருக்கும் உத்தரவு
இதனிடையே தினகரனின் வழக்கறிஞர் குமார் 11 மணிக்கும், தினகரனின் நண்பர் மல்லிகார்ஜூனா, உதவியாளர் ஜனார்தனன் ஆகியோர் இன்று பிற்பகல் 2மணிக்கும் ஆஜராக போலீசார் உத்தரவிட்டது.
குமாரிடம் விசாரணை
அதன்படி டிடிவி.தினகரனின் வழக்கறிஞர் குமார் இன்று டெல்லி போலீசார் முன்னிலையில் ஆஜராகியுள்ளார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.