டெல்லி பூங்காவில் பயங்கரம்... கள்ளக்காதலியைச் சுட்டுக் கொன்று தற்கொலைக்கு முயன்ற எஸ்.ஐ
டெல்லி: டெல்லியில் பூங்கா ஒன்றில் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் ஒருவர் 28 வயது பெண்ணை சுட்டுக் கொன்று தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் தென்மேற்குப் பகுதியில் உள்ள துவார்கா பகுதியில் இன்று காலை 9.30 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. சப்இன்ஸ்பெக்டரும், அப்பெண்ணும் முதலில் பேசிக் கொண்டிருந்ததாகவும், அப்போது கோபத்தில் அவர் துப்பாக்கியால் அப்பெண்ணை மூன்று முறை சுட்டதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
அப்பெண்ணைச் சுட்டவுடன், தன்னையும் அவர் இரண்டு முறை சுட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு அவர்களைச் சோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அப்பெண் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். சப் இன்ஸ்பெக்டர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
போலீசாரின் விசாரணையில் ஏற்கனவே அந்த சப் இன்ஸ்பெக்டர் மீது அவரது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளது தெரிய வந்துள்ளது.
அதோடு தற்போது சுட்டுக் கொல்லப்பட்ட அப்பெண்ணிற்கும், சம்பந்தப்பட்ட சப் இன்ஸ்பெக்டருக்கும் தகாத உறவு இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது. கடந்த 3 வருடமாக இந்தப் பெண்ணுடன் அவருக்குத் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.