விளக்குமாறால் குப்பையாக வீசப்பட்ட பா.ஜ.க.! அமித்ஷா வித்தை வீண்- மோடி பொறுப்பு: 'பங்காளி' சிவசேனா!
மும்பை: டெல்லி சட்டசபை தேர்தல் ஆம் ஆத்மி கட்சியின் துடைப்பத்தால் பா.ஜ.க. குப்பையாக பெருக்கி வீசப்பட்டுவிட்டது இந்த தேர்தல் தோல்விக்கு பிரதமர் மோடிதான் காரணம் என்று அதன் கூட்டணி கட்சியான சிவசேனா மிகக் கடுமையாக சாடியுள்ளது.
டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 70 இடங்களில் 67 ஐ ஆம் ஆத்மி கைப்பற்றி சாதனை படைத்தது. பாரதிய ஜனதா கட்சி 3 இடங்களில் மட்டுமே வென்றது.

காங்கிரஸ் கட்சியோ ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. கடந்த 2013 ஆம் ஆண்டு தேர்தலில் 31 இடங்களை பெற்று முதலிடம் பிடித்த பாரதிய ஜனதா இந்த தேர்தலில் வெறும் 3 தொகுதிகளிலே வெற்றி பெற்றது நாடு முழுவதும் உள்ள அக்கட்சித் தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தேர்தல் தோல்விக்கு பிரதமர் மோடியே காரணம் என்று எதிர்க்கட்சிகள் சாடி வருகின்றன. இந்நிலையில் பாரதிய ஜனதாவின் கூட்டணியில் உள்ள கட்சிகளும் தங்களது பங்குக்கு அக்கட்சியின் மீது தாக்குதலை தொடுத்துள்ளது.
டெல்லி தேர்தல் முடிவுகள் குறித்து பாரதிய ஜனதாவின் கால் நூற்றாண்டுக்கும் மேலாக கூட்டணி கட்சியான சிவசேனா தமது அதிகாரப்பூர்வ ஏடானா சாம்னாவில் இன்று எழுதியுள்ள தலையங்கம்:
லோக்சபா தேர்தலில் அபார பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற பாரதிய ஜனதா, ஆம் ஆத்மி கட்சியின் துடைப்பத்தால் (விளக்குமாறால்) தூசியாக தூக்கி எறியப்பட்டுவிட்டது. பாரதிய ஜனதா தலைவர்கள் தாங்கள் வெற்றி பெற்ற தொகுதிகளை எண்ண விரல்கள் கூட தேவையில்லை.
தேர்தல் தோல்விக்கு கிரண் பேடியை கை காட்டுவது சரியல்ல. பேச்சு சாதுர்யம் மற்றும் தேர்தல் வாக்குறுதியை மட்டும் வைத்துக்கொண்டு தேர்தலில் வெற்றி பெற முடியாது. அமித்ஷாவின் வித்தை டெல்லியில் எடுபடவில்லை.
இறுதி கட்ட ஆயுதமாக மோடியை முன்வைத்ததும் தோல்வியில்தான் முடிந்து போயுள்ளது. தேர்தல் தோல்விக்கு யார் போறுப்பேற்க வேண்டும் என்பதை பா.ஜ.க. தெளிவுபடுத்த வேண்டும்.
ஒட்டுமொத்த தேர்தல் பிரசாரமும் மோடியை முன்னிறுத்தியே எதிர்கொள்ளப்பட்டது. அன்னா ஹசாரேவும் இது மோடியின் தோல்வி என்று கருத்து தெரிவித்துள்ளார். அது தான் சரி என்று நாங்களும் கருதுகிறோம்.
மற்ற மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற போது மோடியின் வெற்றி என கூறியவர்கள், தற்போதைய டெல்லி தோல்விக்கும் மோடிதான் காரணம் என்றே கூற வேண்டும்.
பாரதிய ஜனதாவின் தோல்வியையும், ஆம் ஆத்மி எழுச்சியையும் தேசிய அரசியலில் ஒரு புதிய சகாப்தம் உருவாவதாக எடுத்துக் கொள்ளவேண்டுமா? மக்கள் ஏன் பாரதிய ஜனதா கட்சியை ஒட்டுமொத்தமாக புறக்கணித்துள்ளனர்?
பாரதிய ஜனதா மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு என்ன செய்தது? வேலையின்மை சதவீதம் நாட்டில் குறையவில்லை, பண வீக்கம் தொடர்ந்து இருக்கிறது, வீடு இல்லாதவர்கள் வீடுகளை பெறவில்லை... தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை
தேர்தல் பிரச்சாரத்தின்போது, ராகுல் காந்தியையும், கேஜ்ரிவாலையும் விமர்சிப்பதையே மோடியும் அவரது சகாக்களும் செய்தனர்.
'எதிர்மறை பிரச்சாரம்' மேற்கொண்டதன் விளைவுகளை பாரதிய ஜனதா கட்சி அனுபவித்தே ஆக வேண்டும். அமெரிக்கா அதிபர் பராக் ஒபாமாவை தேர்தலுக்கு முன்பாக அழைத்தது கூட பயனில்லாமல் போய்விட்டது.
இவ்வாறு சிவசேனாவின் சாம்னா தலையங்கத்தில் எழுதப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications