டெல்லியில் ஆட்சியை பிடிப்பது ஆம் ஆத்மியா? பா.ஜ.க.வா? நாளை வாக்குப் பதிவு!
டெல்லி: நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டெல்லி சட்டசபை தேர்தலில் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
லோக்சபா தேர்தலிலும், அதைத் தொடர்ந்து நடந்த சட்டசபை தேர்தல்களிலும் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று எதிர்க்கட்சிகளை அதிர வைத்தது. இந்த வெற்றியை 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லியிலும் பெற்றாக வேண்டிய போராட்டத்தில் பாரதிய ஜனதா இருந்து வருகிறது.
ஆனால் தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளோ இம்முறை ஆம் ஆத்மி கட்சி, அறுதிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடிக்கும் என்று கூறி வருகின்றன. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி தேர்தல் களத்திலே இல்லை என்கிற அளவில்தான் அனைத்து கருத்து கணிப்பு முடிவுகளும் கூறுகின்றன.

673 வேட்பாளர்கள்
டெல்லியின் 70 சட்டசபை தொகுதிகளில் 673 வேட்பாளர்கள் களமிறங்கி உள்ளனர்.

முதல்வர் வேட்பாளர்கள்
ஆம் ஆத்மியின் அரவிந்த் கேஜ்ரிவால், பாரதிய ஜனதாவின் கிரண்பேடி ஆகியோர் அந்த கட்சிகளின் முதல்வர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அரவிந்த் கேஜ்ரிவால், புதுடெல்லி தொகுதியிலும், கிரண்பேடி கிருஷ்ணா நகர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் கட்சி முதல்வர் வேட்பாளர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும்கூட, முன்னிறுத்தப்பட்டுள்ள அஜய் மக்கான், சாதர் பஜார் தொகுதியில் போட்டியிடுகிறார்.

பிரதமர் மோடி பிரசாரம்
கடந்த 15 நாட்களாக நடந்து வந்த தீவிர பிரசாரத்தில் அனல் பறந்தது. பாரதிய ஜனதாவுக்காக பிரதமர் நரேந்திர மோடியும், கட்சித்தலைவர் அமித் ஷாவும் தீவிர பிரசாரம் செய்தனர். இவர்களுடன் ராஜ்நாத்சிங், அருண் ஜேட்லி, சுஷ்மா சுவராஜ், ரவிசங்கர் பிரசாத், உமாபாரதி, வெங்கையா நாயுடு மற்றும் 120 எம்.பி.க்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

கேஜ்ரிவால்..
ஆம் ஆத்மி கட்சியின் பிரசாரம், முழுக்க முழுக்க அரவிந்த் கேஜ்ரிவாலை சார்ந்துதான் இருந்தது.

சோனியா, ராகுல்
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் தலைவர் சோனியா காந்தியும், துணைத்தலைவர் ராகுல் காந்தியும் களமிறங்கி பிரசாரம் செய்தனர்.

மோடி அரசு மீதான வாக்கெடுப்பா?
டெல்லி சட்டசபை தேர்தல், பிரதமர் மோடியின் 10 மாத ஆட்சிக்கு ஒரு கருத்து வாக்கெடுப்பாக அமையுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பிரசாரம் ஓய்வு
இம்மாநிலத்தில் அனல் பறக்க நடந்து வந்த பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. டெல்லியில் 1 கோடியே 33 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் புதிய வாக்காளர்கள் 1.5 லட்சம் பேர். இவர்கள் வாக்களிப்பதற்காக மொத்தம் 11 ஆயிரத்து 763 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

நாளை வாக்குப் பதிவு
பலத்த பாதுகாப்புடன் நாளை காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிகிறது. பதிவாகிற வாக்குகள் 10-ந்தேதி எண்ணப்படுகின்றன. அன்றே டெல்லியில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications