டெல்லியில் பயங்கரம்: வேலைக்காரச் சிறுமியை கொடூரமாக சித்ரவதை செய்த 50 வயதுப்பெண் கைது
டெல்லி: டெல்லியில் வீட்டில் வேலை செய்த வேலைக்காரச் சிறுமியை மிகவும் கோடூரமான முறையில் கொடுமைப்படுத்திய குற்றத்திற்காக 50 வயதுப் பெண் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
தெற்கு டெல்லியின் வசந்த்கஞ்ச் பகுதியில் வசித்து வருபவர் வந்தனா தீர் (50). இவருடன் இவரது 85 வயது தாயார் ஷீலா என்பவரும் வசித்து வருகிறார். நேற்று முன் தினம் இவர்களது வீட்டு மாடியில் நின்று சிறுமி ஒருவர் உடல் முழுக்க தீ மற்றும் வெட்டுக்காயங்களுடன் தன்னை காப்பாற்றும்படி கதறி அழுதபடி கூச்சலிட்டுக் கொண்டிருந்தாள்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மனித உரிமை ஆர்வலர்களும், போலீசாரும் சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். முதலுதவி சிகிச்சைக்குப் பின் அச்சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அச்சிறுமி ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும், வீட்டு வேலைக்காக வந்தனா வீட்டிற்கு அழைத்து வரப்பட்டவள் என்பதும் தெரிய வந்தது.
மேலும், தன்னை எஜமானி வந்தனா செய்த கொடுமைகள் என அச்சிறுமி போலீசில் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்திருப்பதாவது, ‘என்னை வெளியே போக விடாமல் அடைத்து வைத்திருந்த முதலாளி அம்மா, சற்று நேரம் கூட ஓய்வு தராமல் தொடர்ந்து என்னிடம் வேலை வாங்கி வந்தார்.
நான் செய்த வேலையில் எப்போதும் குறை கண்டுபிடிக்கும் அவர் சூடு போட்டும், பெல்ட், பிரம்பு போன்றவற்றால் அடித்தும் சித்ரவதை செய்வார். சில வேளைகளில் வெட்டுக்கத்தியால் தாக்கியும் கொடுமை படுத்துவதுண்டு' எனக் கூறினார்.
சிறுமி கூறியவை அனைத்தும் உண்மையாகத் தான் இருக்க வேண்டும் என்பதை அவளது தலை மற்றும் உடலில் உள்ள வெட்டு காயங்கள் மற்றும் தீக்காயங்கள் உறுதிப்படுத்துகின்றன என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, சிறுமியை கொடுமைப் படுத்திய குற்றத்திற்காக வந்தனாவை நேற்றுப் போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அச்சிறுமியை நேற்று நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார் டெல்லி அரசின் குழந்தைகள் மற்றும் மகளிர் மேம்பாட்டு துறை அமைச்சர் கிரண் வாலியா. பின்னர், சிறுமியின் நிலை குறித்து அவர் கூறியதாவது, 'சிறுமிக்கு நேர்ந்துள்ள இந்த கொடுமை கொடூரமானது, காட்டுமிராண்டித்தனமானது' என்றார்.












Click it and Unblock the Notifications