டெல்லியில் வாலிபரை கொன்ற வெள்ளை புலி விஜய்யை பார்க்க அலைமோதிய கூட்டம்
டெல்லி: டெல்லியில் வாலிபரை கொன்ற வெள்ளை புலி விஜய்யை பார்க்க விலங்கியல் பூங்காவில் புதன்கிழமை மக்கள் கூட்டம் அலை மோதியது.
கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லியில் உள்ள விலங்கியல் பூங்காவுக்கு சென்ற 20 வயது மக்சூத் என்பவரை வெள்ளை புலி விஜய் கடித்து குதறி கொன்றது. இந்த சம்பவம் பற்றிய வீடியோ இணையதளங்களில் தீயாக பரவியது.
இந்த வீடியோவை பார்த்து, செய்தியை படித்த பிறகு பலர் அந்த புலியை பார்க்கும் ஆர்வத்தில் விலங்கியல் பூங்காவுக்கு புதன்கிழமை சென்றனர்.
இது குறித்து பூங்காவுக்கு வந்த சிலர் கூறுகையில்,
நான் லக்னோவை சேர்ந்தவன். செய்தித்தாளில் புலி வாலிபரை கொன்றது பற்றி படித்தேன். அதன் பிறகு தான் அந்த புலியை பார்க்க பூங்காவுக்கு வந்தேன் என்று டி.சி. குப்தா என்பவர் தெரிவித்தார். நடந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் தான் என் குடும்பத்தார் விலங்கியல் பூங்காவுக்கு வர முடிவு செய்தனர் என்று டெல்லியைச் சேர்ந்த முகுல் சோப்ரா தெரிவித்தார்.
புலி விஜய்யை பார்க்க புதன்கிழமை விலங்கியல் பூங்காவில் மக்கள் கூட்டம் அலைமோதியது என்று அங்கு பணிபுரியும் ஒருவர் தெரிவித்தார்.