ரூபாய் நோட்டு பற்றிய மோடி அறிவிப்பிற்கு 85% மக்கள் ஆதரவு! கருத்துக் கணிப்பு சொல்கிறது
டெல்லி: ரூ.500, 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என பிரதமர் மோடி அறிவித்த பிறகு இயல்பாகவே நாட்டில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஏடிஎம்களிலும், வங்கிகளிலும் போதிய பணம் இல்லை என்பது சலசலப்புகளை அதிகரித்துள்ளது.
ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்த போது அதை புகழ்ந்தவர்களும், தங்களுக்கு ஏடிஎம்களில் பணம் கிடைக்கவில்லை என்றும் கோபத்தில் கொந்தளிக்க ஆரம்பித்துள்ளனர்.
இந்த சூழ்நிலையிலும், மோடி அறிவிப்பிற்கு ஆதரவு உள்ளதா என்பதை இந்தியாவின் முன்னணி, இணையதள போல் நிறுவனமான 'மைவோட்டுடே' கண்டறிய முனைந்தது. இதற்காக, ஒரு கேள்வியை முன் வைத்தது.
ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பிற்கு நீங்கள் ஆதரவு அளிக்கிறீர்களா என கேள்வி கேட்கப்பட்டது. இதில் 52 ஆயிரத்து 810 பேர் வாக்களித்துள்ளனர். அதில் 85 சதவீதம் பேர் ஆதரவு உண்டு என்றே கூறியுள்ளனர். 15 சதவீதத்தினர் மட்டுமே ஆதரவு இல்லை என கூறியுள்ளனர்.
இதுகுறித்து ஒன்இந்தியாவிடம் பேசிய அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரி டைனிஷ் மன்சூர், "இந்திய பிரதமர்களிலேயே மிகவும் தைரியமான ஒரு முடிவை எடுத்துள்ளார் மோடி என்ற எண்ணம் மக்களிடம் உள்ளது. அதிகாரிகள், அரசியல்வாதிகள், ஹவாலா புள்ளிகள் சிக்கிக்கொள்வார்கள் என்பதே மக்கள் கணிப்பு" என்றார்.