ரூபாய் நோட்டு செல்லாது நடவடிக்கை.. சரியான பாதையில்தான் அரசு செல்கிறதாம்.. அருண் ஜெட்லி உறுதி
ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு தொடர்பான நடவடிக்கையில் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக அருண் ஜெட்லி உறுதியாக கூறியுள்ளார்.
டெல்லி: ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகள் அனைத்தும் சரியான வழிகளில் சென்று கொண்டிருப்பதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பை வெளியிட்டதில் இருந்து மத்திய அரசுக்கு தலைவலி தொடங்கியது. நாடு முழுவதும் மக்கள் கடும் பணத்தட்டுப்பாட்டால் அவதிக்கு ஆளாகியுள்ளனர். மேலும், வங்கியில் பணத்தை மாற்றுவதற்காக நீண்ட வரிசையில் நின்ற போது சுமார் 65 பேர் இதுவரை மரணம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத் தொடர் 16ம் தேதி தொடங்கியது. நாடாளுமன்றத்தில் ரூபாய் நோட்டு செல்லாது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடந்த 6 நாட்களாக முடக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து இன்று ராஜ்ய சபாவில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது ரூபாய் நோட்டு குறித்த விவாதம் நடைபெற்றது. என்றாலும் லோக் சபா 7வது நாளாக இன்றும் ஒத்தி வைக்கப்பட்டது.
இதனிடையே, இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ரூபாய் நோட்டு செல்லாது நடவடிக்கையில் மத்திய அரசு சரியான பாதையில் பயணித்து கொண்டிருக்கிறது என்று உறுதிபட தெரிவித்துள்ளார். மேலும், ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை முட்டாள் தனம் என்று எதிர்க்கட்சிகள் நினைக்கிறதா என்றும் 2ஜி பிரச்சனையும் இதுவும் ஒன்று என்று எதிர்க்கட்சியினர் கருதுகிறார்களா என்றும் அருண் ஜெட்லி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், ரூபாய் நோட்டு செல்லாது விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதாகவும் ஜெட்லி குற்றம் சாட்டினார்.












Click it and Unblock the Notifications