ரூபாய் நோட்டு: விடாது கருப்பாய் தொடரும் அமளி.. 10வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்!
ரூபாய் நோட்டு செல்லாது விவகாரத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டதால் ராஜ்ய சபா நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
டெல்லி: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று கோரியும் பிரதமர் மோடி நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்தியும் எதிர்க்கட்சி எம்பிக்கள் ராஜ்ய சபாவில் கடும் அமளியில் ஈடுபட்டதால் ராஜ்ய சபா நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் 10வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியுள்ளது.
கடந்த 16ம் தேதி நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது. கூட்டம் தொடங்கிய முதல் நாள் முதலே எதிர்க்கட்சிகள் ரூபாய் நோட்டு செல்லாது தொடர்பாக விவாதிக்க ஆளும் பாஜக அரசை வற்புறுத்தி வருகின்றனர். மேலும், விவாதத்தின் போது, பிரதமர் மோடி அவையில் இருக்க வேண்டும் என்று கோரியும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் தருவதற்கு மோடி நாடாளுமன்றத்திற்கு வரவில்லை. எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் ஒரே ஒரு நாள் மட்டும் பிரதமர் மோடி இரண்டு மணி நேரம் ராஜ்ய சபாவில் வந்து அமர்ந்தார். அப்போது, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பை கடுமையாக எதிர்த்துப் பேசினார். அதன் பிறகு பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வரவே இல்லை.
இந்த நிலையில், இன்று காலை வழக்கம் போல் காலை 11 மணிக்கு ராஜ்ய சபா தொடங்கியது. அவை தொடங்கிய உடன், ரூபாய் நோட்டு செல்லாது விவகாரம் தொடர்பாக எழுந்து பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கேள்வி எழுப்பினார். இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அனைவரும் இருக்கையை விட்டு எழுந்து சபாநாயகர் அருகில் வந்து கோஷங்களை எழுப்பினார்கள். இதனையடுத்து, ராஜ்ய சபா அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டது.
பின்னர், மீண்டும் 2 மணிக்கு ராஜ்ய சபா கூடியது. அப்போதும், தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அமளியில் எதிர்க்கட்சியினர் ஈடுபட்டனர். மேலும், எதிர்க்கட்சியினரைக் கண்டித்து பாஜக எம்பிக்களும் கோஷம் எழுப்பியதால் ராஜ்ய சபாவில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சபா நாயகர் நாளை வரை ராஜ்ய சபாவை ஒத்தி வைத்தார்.
ரூபாய் நோட்டு செல்லாது விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் 10வது நாளாக இன்றும் ராஜ்ய சபா முடங்கியுள்ளது.