ரூ.500, 1000 நோட்டுகளுக்குத் தடை.. ராஜ்யசபாவில் கடும் அமளி.. நாள் முழுவதும் அவை ஒத்தி வைப்பு
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை கண்டித்து எதிர்க்கட்சியினர் ராஜ்யசபாவில் இன்று கடும் அமளியில் ஈடுபட்டனர்.
டெல்லி: நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. நேற்றே ராஜ்யசபாவில் ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்து பேசியது. இதனைத் தொடர்ந்து இன்றும் ராஜ்யா சபாவில் கேள்விகளை எழுப்பி கடும் அமளியில் எதிர்க்கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். இதனால் ராஜ்யசபா நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டது.
கடந்த 9ம் தேதியில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று 8ம் தேதி இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். அன்றாட செலவிற்கும் பணம் இல்லாமல் சொந்தப் பணத்தை எடுப்பதற்கும் நாள் முழுக்க வெயிலில் காத்துக் கிடக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானார். இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்தன.

இந்நிலையில், நேற்று நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது. ராஜ்யசபாவில் இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து 2வது நாளாக இன்று காலை 10 மணிக்கு ராஜ்யசபா தொடங்கியது. சபை தொடங்கிய சில நிமிடங்களிலேயே எதிர்க்கட்சிகள் ரூபாய் நோட்டு செல்லாது என்ற விவகாரம் தொடர்பாக கேள்விகளை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
சபா நாயகர் இருக்கையில் அமருமாறு கேட்டுக் கொண்டும் எம்பிகள் அமராமல் தொடர்ந்து அவையின் மையப்பகுதிக்கு வந்து கோஷங்களை எழுப்பினார்கள். இதனையடுத்து 11. 30 வரை அவை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர், மீண்டும் அவை தொடங்கிய போது, எதிர்க்கட்சி எம்பிகள் கடும் அமளியில் மீண்டும் ஈடுபட்டனர். இதனையடுத்து, 2வது முறையாக ராஜ்யசபா 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு முறையும் ராஜ்யசபா ஒத்தி வைக்கப்பட்டு தொடங்கும் போதும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் தொடர்ந்து அவையை நடத்த முடியாத சூழல் உருவானது. இதனையடுத்து, ராஜ்யசபா நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications