பணத்தட்டுப்பாடு தெரிந்தும் ஏன் ரூ.100 நோட்டை அதிகம் அச்சடிக்கவில்லை.. திரிணாமுல் கேள்வி
100 ரூபாய் நோட்டுக்களை ஏன் அதிக அளவில் அச்சடிக்கவில்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்பி ராஜ்ய சபாவில் கேள்வி எழுப்பினார்.
டெல்லி: பணத் தட்டுப்பாடு வரும் என்று தெரிந்தும் ஏன் 100 ரூபாய் நோட்டுக்களை அதிக அளவில் அச்சிடப்படவில்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரெய்ன் இன்று ராஜ்ய சபாவில் கேள்வி எழுப்பினார்.
கடந்த 16ம் தேதி நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது. தொடக்க நாளில் இருந்தே ராஜ்ய சபாவில் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது தொடர்பாக அமளியில் எதிர்க்கட்சியினர் ஈடுபட்டு வந்தனர். ராஜ்ய சபாவில் பிரதமர் மோடி நேரில் வந்து பதில் அளிக்க வேண்டும், இது குறித்து தொடர்பாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று கோரியும் கடந்த 6 நாட்களாக ராஜ்ய சபா முடக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு ராஜ்ய சபா கூடியது. எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் 12 மணி வரை அவை ஒத்தி வைக்கப்பட்டு மீண்டும் கூடிய போது பிரதமர் மோடி அவைக்கு வந்தார். இதனையடுத்து ராஜ்ய சபாவில் ரூபாய் நோட்டு செல்லாது என்ற விவகாரம் குறித்த விவாதத்தை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைத்து பேசினார்.
இதனைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பி டெரிக் ஓ பிரெய்ன் பேசியதாவது:
ரூபாய் நோட்டு செல்லாது என்று மோடி அறிவித்துள்ளது இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரையும் பாதித்துள்ளது. ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பால் ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏற்படும் என்று தெரிந்தும் ஏன் 100 ரூபாய் நோட்டை அதிக அளவில் அச்சடிக்கவில்லை. பழைய 500 ரூபாய் நோட்டு செல்லுப்படியாகும் என்று மீண்டும் மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.
ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் 92 சதவீத மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளதை கேட்டு மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை பிரதமர் மோடி திரும்பப் பெற வேண்டும் என்று டெரிக் ஓ பிரெய்ன் கேட்டுக் கொண்டார்.