புகையிலை தர மறுத்த அக்காவை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்த வாலிபர்
டெல்லி: மேற்கு டெல்லியில் வாலிபர் ஒருவர் தனக்கு புகையிலை தர மறுத்த அக்காவின் கழுத்தை நெறித்துக் கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
மேற்கு டெல்லியில் உள்ள மஹாவிர் என்கிளேவில் வசித்து வந்தவர் நீலம்(24). அவரது சகோதரர்கள் அனில் குமார்(28), தீபக் குமார்(21). அனில் சப்தர்ஜங் என்கிளேவில் உள்ள கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தில் பயிற்சியாளராக வேலை பார்த்து வருகிறார்.
காசநோய் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட தீபக்கிற்கு சிறந்த மருத்துவம் அளிக்க அவரை கடந்த ஆண்டு தாத்ரி கிராமத்தில் இருந்து டெல்லிக்கு அழைத்து வந்துள்ளார் அனில். தீபக்கை கவனித்துக் கொள்ள அவருடன் நீலமும் டெல்லி வந்துள்ளார்.
சனிக்கிழமை மாலை தீபக் தான் சுவைத்து மகிழ புகையிலை தராத அக்கா நீலமுடன் சண்டை போட்டுள்ளார். அதன் பிறகு அவர்கள் இருவரையும் காணவில்லை என பக்கத்து வீட்டு பெண் சரஸ்வதி அனிலுக்கு போன் மூலம் தகவல் அளித்துள்ளார். அனில் வந்து பல இடங்களில் தேடி ஒரு வழியாக தீபக்கை கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். ஆனால் நீலமை காணவில்லை.
இரவு உணவு அளித்தும் தீபக் சாப்பிட மறுத்துள்ளார். தூக்கத்தில் இருந்து திடீர் என விழித்த அனில் தீபக் வீட்டில் இல்லாததை கண்டுபிடித்தார். மாடிக்கு சென்று பார்த்தபோது தீபக் தூக்கில் பிணமாகத் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீபக்கின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் பணம் எடுப்பதற்காக கட்டிலில் உள்ள மெத்தையை அகற்றினார் அனில். அப்போது கட்டிலில் உள்ள பெட்டி போன்ற பகுதியில் நீலம் கழுத்தில் துப்பட்டா நெறிக்கப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்ததை பார்த்து அனில் மேலும் அதிர்ச்சி அடைந்தார்.
புகையிலை தராத கோபத்தில் தீபக் நீலமை கொலை செய்தது தெரிய வந்துள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகு நீலம் மற்றும் தீபக்கின் உடல்கள் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டன.