"மோடி அலை.." குஜராத்தை அப்படியே விழுங்கிய பாஜக! ஆனாலும் அந்த 7 இடங்களில் காத்திருந்த ஷாக்! என்னாச்சு
காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் பாஜக மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ள போதிலும், அங்குப் பல இடங்களில் சிட்டிங் எம்எல்ஏக்கள் தோல்வியடைந்துள்ளனர்.
குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டசபைத் தேர்தல் முடிவுகள் நேற்று தான் வெளியானது. இமாச்சலில் தோற்று இருந்தாலும் கூட, குஜராத்தில் பாஜக மிகப் பெரியளவில் வென்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டு உள்ளது.
குஜராத்தில் கடந்த 27 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக பாஜக தான் ஆட்சியில் இருந்து வருகிறது. இப்போது நடைபெற்ற தேர்தலிலும் கூட, குஜராத் வரலாற்றில் இல்லாத அளவுக்கு பாஜக மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
பட்டாசு கடை நடத்திய அரசியல்வாதி! தேடி வந்த முதல்வர் பதவி! கெட்டியாக பிடித்து கொள்ளும் பூபேந்தர படேல்
குஜராத்
குஜராத் சட்டசபையில் மொத்தம் 182 இடங்கள் உள்ள நிலையில், அதில் சுமார் 156 இடங்களில் பாஜகவுக்கு வெற்றி கிடைத்துள்ளது. குஜராத் மாநிலத்தில் இதுவரை எந்தவொரு மாநிலக் கட்சியும் இவ்வளவு பெரிய வெற்றியைப் பதிவு செய்தது இல்லை. இதற்கு முன்பு 1985ஆம் ஆண்டு நடந்து குஜராத் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிகபட்சமாக 149 இடங்களில் வென்றிருந்தது. அந்த 37 ஆண்டு சாதனையை முறியடித்துள்ள பாஜக இப்போது 156 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
பூபேந்திர படேல்
குஜராத்தில் பாஜக பெரிய வெற்றியைப் பெறுவது சந்தேகம் என எதிர்க்கட்சியின் கூறியது எல்லாம் தவிடு பொடியாகியுள்ளது. குறிப்பாக குஜராத் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான பூபேந்திர படேல் சுமார் 1.70 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.. இந்தச் சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு, குஜராத் முதல்வர் மாற்றப்படலாம் எனச் சொல்லப்பட்ட நிலையில், அதையெல்லாம் உடைத்து நொறுக்கி மிகப் பெரிய ஒரு வெற்றியை பாஜகவுக்குப் பெற்று தந்துள்ளார் பூபேந்திர படேல்.
தோல்வி
குஜராத்தில் இதுவரை எந்தவொரு கட்சியும் இவ்வளவு பெரிய வெற்றியைப் பதிவு செய்தது இல்லை. இது பாஜக தொண்டர்களுக்கு மிகப் பெரிய உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. குஜராத் மாநிலம் முழுக்க பாஜக அலை வீசிய போதிலும் கூட ஒரு அமைச்சர் உட்பட 7 பாஜக எம்எல்ஏக்கள் இந்தத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்து உள்ளனர். பாஜக பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்த போதிலும், இந்த 7 பேரால் வெற்றி பெற முடியவில்லை.
பாஜக திட்டம்
தேர்தலுக்கு முன்பு வரை அங்கு மாநில அரசு மீது அதிருப்தி இருந்ததாகச் சொல்லப்பட்டது. குறிப்பாக எம்எல்ஏக்களின் செயல்பாடுகளால் மக்கள் அதிருப்தி அடைந்திருந்ததாக சொல்லப்பட்டது. இதனால் சில அமைச்சர்கள் உட்பட சுமார் 40 எம்எல்ஏக்களுக்கு பாஜக சீட்டே வழங்கவில்லை. அவர்களில் சில அதிருப்தியடைந்து சுயேச்சையாகவும் போட்டியிட்டுத் தோல்வியடைந்தனர். அதிருப்தியைச் சமாளிக்க சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு மீண்டும் சீட் வழங்காத பாஜகவின் இந்தப் பிளான் நன்றாகவே ஓர்க்அவுட் ஆனது.
யார் அவர்கள்
இருந்தாலும் கூட சீட் வழங்கப்பட்ட ஒரு அமைச்சர் உட்பட 7 சிட்டிங் எம்எல்ஏ உட்பட தோல்வியடைந்துள்ளனர். அதில் குறிப்பாக பூபேந்திர படேல் அரசில் கல்வித்துறை அமைச்சராக இருந்த கிர்த்தி சிங் வகேலா, பனஸ்கந்தாவின் கன்கேரேஜ் தொகுதியில் இந்த முறை களமிறங்கிய இவர் படுதோல்வியடைந்தார். இது தவிர, படானின் சான்ஸ்மா தொகுதியின் சிட்டிங் திலீப் தாக்கூர், பாபு போக்கிரியா (போர்பந்தர் தொகுதி), ராமன் படேல் (பீஜாப்பூர் தொகுதி), மகேஷ் ராவல் (காம்பத் தொகுதி) தோல்வியடைந்தனர். அதிலும் கரியாதார் தொகுதியில் தொடர்ச்சியாக 6 முறை வென்ற கேசு நாகரானியும் கூட இந்தத் தேர்தலில் படுதோல்வியடைந்தார்.
சரியான திட்டம்
அதிருப்தியைச் சமாளிக்க சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் வழங்க மறுத்த பாஜகவின் திட்டம் ஓர்க்அவுட் ஆகியுள்ளது என்றே சொல்ல வேண்டும். சிட்டிங் எம்எல்ஏக்கள் என்பதால் சீட் வழங்கியிருந்தால் இன்னும் கூட பல இடங்களில் பாஜக தோல்வியைச் சந்தித்து இருக்கும். இதை முன்கூட்டியே உணர்ந்ததால் தான் சரியாக செயல்படாத எம்எல்ஏக்களை கண்காணித்து அவர்களுக்கு வாய்ப்பு வழங்காமல் தவிர்த்துள்ளது பாஜக.!
மீண்டும் முதல்வராக
குஜராத் முதல்வராக இருந்த பூபேந்திர படேல் சுமார் 1.70 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.. அவர் வரும் திங்கள்கிழமை மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார். ஜூலை 1962இல் அகமதாபாத்தில் பிறந்த பூபேந்திர படேல், சிறு வயதிலேயே இருந்தே ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் பணியாற்றியவர். அதன் பின்னர், நகராட்சி கவுன்சிலராக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய இவர், 3 முறை அகமதாபாத் கவுன்சிலராகவும், 2015 முதல் 2017 வரை அகமதாபாத் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். இப்போது மீண்டும் இரண்டாவது முறையாகக் குஜராத் முதல்வராகப் பொறுப்பேற்க உள்ளார்.