காவிரி... மோடியைச் சந்தித்தார் தேவெ கெளடா! #TNNeedsKaveri
டெல்லி: காவிரிப் பிரச்சினை தொடர்பா கர்நாடகத்தில் இன்று பந்த் நடத்தப்பட்ட நிலையில் முன்னாள் பிரதமர் தேவெ கெளடா இன்று மாலை பிரதமர் மோடியைச் சந்தித்து பேசினார்.
தமிழகத்திலிருந்து ஒரு தலைவரும் சென்னையை விட்டு வெளியே வரவில்லை. அறையில் அமர்ந்து கொண்டு அறிக்கை அறிக்கையை அடித்துத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கர்நாடகத் தலைவர்கள் எங்கெல்லாம் ஓட முடியுமோ அங்கெல்லாம் ஓடுகிறார்கள். முன்னாள் பிரதமர் தேவெ கெளடா இன்று மாலை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
இந்த சந்திப்பு பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடைபெற்றது. அப்போது கர்நாடகத்தின் நிலையை பிரதமரிடம் விளக்கி, தமிழகத்திற்குக் கூடுதல் நீர் திறக்க முடியாத நிலையில் கர்நாடகம் இருப்பதை அவர் பிரதமரிடம் விளக்கி கூறியதாக தெரிகிறது. மேலும் காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என மோடியிடம் தேவெ கெளடா கோரிக்கை வைத்துள்ளார்.
காவிரி கண்காணிப்புக் குழு 12ம் தேதி கூடவுள்ள நிலையில் பிரதமரைச் சந்தித்து அவர் மூலம் காவிரிக் கண்காணிப்பு குழுவின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்த கெளடா முயல்வதாக கருதப்படுகிறது.