தமிழகம், உத்தரப் பிரதேசத்திலும் பாதுகாப்பு வழித்தடங்கள் மேம்படுத்தப்படுகின்றன: பிரதமர் மோடி
கெவாடியா: தமிழகம், உத்தரப்பிரதேச மாநிலங்களில் பாதுகாப்பு வழித்தடங்கள் மேம்படுத்தப்பட்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
குஜராத்தின் கெவாடியாவில் சர்தார் பட்டேல் சிலைக்கு மாலை அணிவித்து பிரதமர் மோடி இன்று மரியாதை செலுத்தினார். பின்னர் தேசிய ஒற்றுமை தினம் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தொடக்கத்தில், மோர்பியில் நடந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். கெவாடியாவில் தாம் இருந்தாலும், மோர்பியில் நடந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் தமது இதயம் இணைந்திருப்பதாக அவர் கூறினார். "ஒருபுறம், துக்கத்தால் நிறைந்த இதயம் உள்ளது, மறுபுறம் பொறுப்பு மற்றும் கடமைப் பாதை உள்ளது," என்று அவர் கூறினார்.

"இது நமது சுதந்திரத்தின் 75 ஆண்டுகளை நிறைவு செய்த ஆண்டு, நாம் புதிய தீர்மானங்களுடன் முன்னேறி வருகிறோம்." என்று 2022 ஆம் ஆண்டில் தேசிய ஒற்றுமை தினத்தின் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்தினார். குடும்பம், சமூகம் அல்லது தேசம் என ஒவ்வொரு கட்டத்திலும் ஒற்றுமை அவசியம் என்று பிரதமர் கூறினார். இந்த உணர்வு நாடு முழுவதும் 75,000 ஒற்றுமை ஓட்டங்களில் வெளிப்படுகிறது என்றார். "சர்தார் படேலின் வலுவான உறுதியிலிருந்து முழு நாடும் உத்வேகம் பெறுகிறது. ஒவ்வொரு குடிமகனும் நாட்டின் ஒற்றுமைக்காகவும், 'ஐந்து உறுதிமொழிகளை' செயல்படுத்துவதற்கான உறுதிமொழி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்", என்றார் அவர்.
சர்தார் படேல் போன்ற தலைவர்களால் நமது சுதந்திரப் போராட்டம் நடத்தப்படாவிட்டால், சூழ்நிலையை கற்பனை செய்வது கடினம் என்று பிரதமர் கூறினார். 550க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் இணைக்கப்படாவிட்டால் என்ன நடந்திருக்கும்? "நமது சமஸ்தானங்கள் ஆழ்ந்த தியாக உணர்வையும் நம்பிக்கையையும் அன்னை இந்தியாவின் மீது காட்டாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?" என்று பிரதமர் கேட்டார்.
இந்தியாவின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தைக் கண்டு பொறாமை கொள்ளும் சக்திகள் இன்னும் உள்ளதாலும், சாதி, பிரதேசம், மொழி, வரலாறு ஆகியவற்றின் அடிப்படையில் பிரிவினையை தூண்டும் முயற்சிகள் நடந்து கொண்டிருப்பதாலும் அனைவரும் விழிப்புடன் இருக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். நாட்டைப் பிளவுபடுத்தும் மற்றும் பலவீனப்படுத்தும் அடிமை மனப்பான்மை, சுயநலம், சமரசம், உறவினர்களுக்கு உதவுதல், பேராசை, ஊழல் ஆகியவற்றுக்கு எதிராகவும் அவர் எச்சரித்தார். "பிரிவினையின் விஷத்தை நாம் ஒற்றுமையின் அமிர்தத்தால் எதிர்கொள்ள வேண்டும்" என்று அவர் கேட்டுக் கொண்டார்.
"ஒற்றுமை தின விழாவில், சர்தார் சாகேப் ஒப்படைத்த பொறுப்பை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்" என்று பிரதமர் குறிப்பிட்டார். தேசத்தின் ஒற்றுமையை வலுப்படுத்துவது குடிமக்களின் பொறுப்பு என்றும், நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பொறுப்புணர்வுடன் கடமைகளைச் செய்யத் தயாராக இருந்தால் மட்டுமே இது நடக்கும் என்றும் அவர் கூறினார். "இந்த பொறுப்புணர்வுடன், அனைவரும் இணைந்து முயற்சித்து உயருவோம் என்பதை சாத்தியமாக்க முடியும். இதனால், இந்தியா வளர்ச்சிப் பாதையில் மேலும் முன்னேறும்" என்று பிரதமர் கூறினார். பாரபட்சமின்றி, நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் அரசின் கொள்கைகள் சென்றடைந்து வருவதாக அவர் கூறினார். குஜராத்தின் சூரத்தில் உள்ள மக்களைப் போலவே அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள சியாங் மக்களுக்கும் இலவச தடுப்பூசிகள் எளிதாகக் கிடைக்கின்றன என்பதை எடுத்துக்காட்டுகளுடன் பிரதமர் எடுத்துரைத்தார். எய்ம்ஸ் போன்ற மருத்துவ நிறுவனங்களை கோரக்பூரில் மட்டுமல்லாமல், பிலாஸ்பூர், தர்பங்கா, குவஹாத்தி, ராஜ்கோட் மற்றும் நாட்டின் பிற பகுதிகளிலும் காணலாம். தமிழகம் மட்டுமின்றி உத்தரப் பிரதேசத்திலும் பாதுகாப்பு வழித்தடங்கள் மேம்பாட்டுப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு மொழிகள் பேசப்பட்டாலும், வரிசையில் நிற்கும் கடைசி நபரை இணைக்கும் போது, அரசின் திட்டங்கள் இந்தியாவின் ஒவ்வொரு பகுதியையும் சென்றடைகின்றன என்று பிரதமர் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications