சிக்கலில் திலீப்.. காவ்யா மாதவனும் விசாரணையில் தப்ப முடியாது.. கேரள போலீஸ் தடாலடி
நடிகை பாவனா துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப்பைத் தொடர்ந்து அவரது மனைவி காவ்யா மாதவனிடம் விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
திருவனந்தபுரம் : நடிகை பாவனா பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில் நடிகை காவ்யா மாதவனிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
கடநத் பிப்ரவரி 17ம் தேதி காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான நடிகை பாவனா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் திலீப் போலீஸ் விசாரணையில் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைக் கூறி வருகிறார். இதனால் இந்த வழக்கின் விசாரணை முடிவதற்குள் நடிகை காவ்யா மாதவன், அவருடைய தாயார் சியாமளா, இயக்குனர் லால் மற்றும் எம்எல்ஏ பி.டி.தாமஸிடமும் வாக்குமூலம் பெறப்படும் என்று போலீசார் கூறியுள்ளனர்.
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதும், நடிகை பாவனா இயக்குனர் லால் வீட்டில் தான் இருந்துள்ளார். அவர் அங்கு இருந்த போது அந்த தொகுதி எம்எல்ஏ பாவனாவை லாலின் வீட்டிற்கு சென்று பார்த்து வந்துள்ளார்.
நீதிமன்றத்தில் ஆஜர்
இதனிடையே கைது செய்யப்பட்டுள்ள நடிகர் திலீப் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்த கொடுக்கப்பட்ட அனுமதி முடிந்ததையடுத்து அங்கமாலி நீதிமன்றத்தில் அவர் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவகாசம் நீட்டிப்பு
எனினும் இரண்டாவது குற்றவாளி குறித்து மேலும் தகவல்கள் திரட்ட வேண்டியுள்ளதால் விசாரணையை நீட்டிப்பதற்கு போலீசார் அவகாசம் கோரினர். இதனையடுத்து மேலும் ஒரு நாள் போலீஸ் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதே போன்று நடிகர் திலீப்பிற்கு ஜாமின் தரவும் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
காரணம் என்ன?
கடந்த இரண்டு நாட்களாக போலீஸ் விசாரணையின் போது திலீப் எர்ணாகுலம், திருச்சூர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டார். நடிகை மீதான காழ்ப்புணர்ச்சிக்கான காரணம், யாருடன் சதித்திட்டம் தீட்டப்பட்டது உள்ளிட்டவை குறித்து அப்போது விசாரிக்கப்பட்டுள்ளது.
எம்எல்ஏக்கள், வக்கீலுக்கு கேள்வி
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு எம்எல்ஏக்கள், முக்கிய குற்றவாளி பல்சர் சுனியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உதவிய வழக்கறிஞர் பிரதீஷ் சக்கோ உள்ளிட்டோருக்கு போலீசார் சில கேள்விகள் அடங்கிய விசாரணை அறிக்கையை அனுப்பியுள்ளனர். இதற்கு பதிலளிக்குமாறு அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கறிஞர் சக்கோ பல்சர் சுனி அளித்த பாவனா வீடியோ அடங்கிய செல்போனை மறைக்க உதவியதாக சந்தேகிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.