பட்ஜெட்டில் டீசல் மீதான விலை கட்டுப்பாடு தளர்கிறது.. பெட்ரோல் மாதிரி விலை அவ்வப்போது உயரும்!
டெல்லி: டீசல் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான புதிய பரிந்துரைகளை கேபினட் அமைச்சரவைக்கு பரிந்துரைக்க பெட்ரோலியத்துறை அமைச்சகம் தயாரித்து வருகிறது.
எண்ணெய் நிறுவனங்களைப் பொறுத்தவரையில் ஒரு சிலிண்டருக்கு ரூ433 வரை இழப்பை எதிர்கொள்கின்றன. மண்ணெண்ணெய் விற்பனையில் ஒரு லிட்டருக்கு ரூ33ஐ இழப்பை சந்திக்கின்றன.

இதனால் முந்தைய அரசானது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ250 உயர்த்த திட்டமிட்டிருந்தது. அதேபோல் மண்ணெண்ணெய் விலையை ரூ2 முதல் 3 வரை உயர்த்தவும் முடிவு செய்தது. இதர எரிபொருட்கள் மீதான கட்டுப்பாட்டை முந்தைய அரசு தளர்த்திக் கொண்டது.
தற்போதும் கூட அதேபோல் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிலைக்கு மத்திய அரசு தள்ளப்பட்டுக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு நிச்சயமாக ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளும் இதர கட்சிகளும் கடும் எதிர்ப்பை தெரிவிக்கக் கூடும்.
மத்திய அரசைப் பொறுத்த வரையில் உணவு, ரசாயனம் மற்றும் எரிபொருள் மானிய சுமையை சுமார் 15% அளவுக்காவது குறைக்க விரும்புகிறது என்கின்றனர் பெட்ரோலியத் துறை அமைச்சக அதிகாரிகள். சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றுக்கான மானிய சுமையை ஒருமுறை விலை உயர்வை அமல்படுத்துவதன் மூலம் ஓரளவு குறைக்க முடியும் என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இருப்பினும் டீசலில் இருந்துதான் இத்தகைய மாற்றத்தைத் தொடங்க வேண்டும் என்பது மற்றொரு தரப்பு அதிகாரிகளின் கருத்து. ஏனெனில் 2013-14ஆம் ஆண்டில் எரிபொருள் மானியம் மட்டுமே ரூ1,40,000 கோடியாகும். டீசலுக்கான மானியம் மட்டுமே ரூ62,800 கோடியாகுமாம். இதனாலேயே டீசல் மீதான கட்டுப்பாட்டுகளை தளர்த்தி விலையை சிறிது உயர்த்தி மானிய சுமையை குறைக்க மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இதற்கான பரிந்துரைகளை தயாரிப்பதில் பெட்ரோலியத்துறை அமைச்சகம் மும்முரம் காட்டுகின்றன. இப்பரிந்துரைகளை கேபினட் அமைச்சகம் ஏற்றுக் கொள்ளும் நிலையில் பட்ஜெட்டில் எரிபொருள் விலை உயர்வு, மானியங்கள் தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் இடம்பெறக் கூடும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications