மோடியிடம் யாராவது டீ வாங்கி குடித்திருந்தால் அவருக்கு ரூ.2 லட்சம் பரிசு: திக்விஜய் சிங் அறிவிப்பு
டெல்லி: சாய்வாலா என்று சொல்லிக் கொள்ளும் பிரதமர் மோடியிடம் இருந்து டீ வாங்கி குடித்தவர்கள் யாராவது இருந்தால் அவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசு அளிக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.
ஒரு காலத்தில் டீ விற்ற சாய்வாலா நான் என பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் நேரங்களில் தெரிவித்தார். ஒரு டீக்கடைக்காரர் பிரதமர் ஆகியுள்ளதை நினைத்து பெருமைப்படுவதாக பிற டீக்கடைக்காரர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறுகையில்,
மோடியிடம் இருந்து நான் டீ வாங்கிக் குடித்தேன் என யாராவது கூறினாலோ, அல்லது அவருடன் சேர்ந்து கல்லூரியில் படித்ததாக தெரிவித்தாலோ அவருக்கு நான் ரூ. 2 லட்சம் பரிசு அளிப்பேன்.
பள்ளிப் படிப்பு வரை தான் படித்தேன் என்று முன்பு கூறி வந்த மோடி தற்போது கல்லூரியில் படித்ததாக தெரிவித்துள்ளார் என்றார்.