விவாகரத்து வதந்தி: பிரபல நடிகையுடன் நெருக்கமாக இருக்கும் சோயிப் மாலிக்.. சானியா ரசிகர்கள் அதிர்ச்சி!
இஸ்லாமாபாத்: சானியா மிர்சா - சோயிப் மாலிக் நட்சத்திர ஜோடிகள் இடையே பிளவு ஏற்பட்டுள்ளதாக வதந்திகள் கொடி கட்டி பறக்கும் நிலையில் பாகிஸ்தானின் நடிகை ஒருவருடன் சோயிப் மாலிக் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இது சானியா மிர்சா ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் இடையே கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
காதல் திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடிகள் திருமணம் முடிந்த பிறகு அவரவர் நாடுகளுக்காக தொடர்ந்து விளையாடி வந்தனர்.
மனக்கசப்பு
இந்த ஜோடிக்கு 4 வயதில் இஷ்ஹான் மிர்சா என்ற மகனும் உள்ளான். 12 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்த ஜோடிகள் மத்தியில் தற்போது மனக்கசப்பு ஏற்பட்ட்டு இருப்பதாகவும் இதனால், விவகாரத்து செய்ய இருப்பதாகவும் கடந்த சில தினங்களாக வதந்திகள் கொடி கட்டி பறக்கின்றன. சானியா மிர்சாவும் அதற்கு ஏற்றால் போல சில பதிவுகளை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டது இத்தகைய வதந்திகளுக்கு கூடுதல் வலு சேர்ப்பதாக அமைந்து இருக்கிறது.
கடினமான நாட்கள்
குறிப்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு சானியா மிர்சா தனது இன்ஸ்டாகிராமில், உடைந்த இதயங்கள் எங்கு செல்கின்றன...அல்லாவைக் காண.. என்று உருக்கமாக பதிவிட்டு இருந்தார். அதேபோல், இன்ஸ்டாகிராமில் தனது மகனுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு, கடினமான நாள்களைக் கடந்து செல்லும் தருணங்கள் என்று குறிப்பிட்டு இருந்தார்.
தனியாக இருக்கும் படத்தையே
அதேபோல், இருவரும் ஜோடியாக இருக்கும் படங்களை பதிவிடாமல் தனியாக இருக்கும் படத்தையே சானியா மிர்சா சமீபத்தில் கூட பதிவிட்டு இருந்தார். விவகாரத்து பற்றிய வதந்திகள் கடந்த சில தினங்களாக பரவி வந்தாலும் இருவருமே இது குறித்து தங்கள் மவுனத்தை கலைக்கவில்லை. இதனால், இந்த நட்சத்திர ஜோடிகளின் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
விரைவில் விவாகரத்து
அதுபோல தனது மகனுடன் தனியாகவே வசித்து வருவதாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. சட்ட சிக்கல்கள், சில நிகழ்ச்சிகளில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் காரணமாக சானியா - சோயிப் ஜோடி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் விரைவில் விவாகரத்து பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்போவதாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு ஒரு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
ஆயிஷா உமர்தான் காரணம்
இத்தகைய பரபரப்புக்கு மத்தியில் சானியா மிர்சாவின் கணவர் சோயிப் மாலிக், பிரபல மாடலும் நடிகையுமான ஆயிஷா உமருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து வேகமாக பரவி வருகின்றன. சோயிப் - சானியா ஜோடி பிளவுக்கு ஆயிஷா உமர்தான் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூட..
கடந்த ஆண்டு சோயிப் மாலிக்கும் ஆயிஷா உமரும் போட்டா ஷுட் நிகழ்ச்சியில் ஒன்றாக பங்கேற்றதாகவும் இதில் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. சோயிப் மாலிக் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூட ஆயிஷா உமருக்கு பல உதவிகள் செய்தாக புகழ்ந்து பேசியிருந்தார். தற்போது சோயிப் மாலிக் - ஆயிஷா உமர் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் ஆகி வருகின்றன.
யார் இந்த ஆயிஷா உமர்
ஆயிஷா உமரை பொருத்தவரை பாகிஸ்தானில் மிகவும் பிரபலமான நடிகையாகவும் யூடியூபராகவும் வலம் வருகிறார். பாகிஸ்தான் நாடு முழுவதும் மிகவும் அறியப்படும் நபராக இருக்கும் ஆயிஷா உமர், பாகிஸ்தானில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும் இருக்கிறார். பிரபலமான பல தொலைக்காட்சி தொடர்களிலும் ஆயிஷா உமர் நடித்து இருக்கிறார்.