போலீஸே ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா செய்கிறது - திருச்சி சிவா திடுக் புகார்
தமிழக காவல்துறையினரே தினகரனுக்காக பணபட்டுவாடா செய்கின்றனர் என டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் திருச்சி சிவா எம்.பி புகார் மனு அளித்துள்ளார்.
டெல்லி: காவல்துறை மூலமாகவே தினகரன் அணியினர் ஆர்.கே நகரில் பணப்பட்டுவாடா செய்கின்றனர் என டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் திருச்சி சிவா எம்.பி திடுக் புகார் கொடுத்துள்ளார்.
அதிமுக அம்மா அணி வேட்பாளர் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள், ஆர்கே நகரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. நேற்றிலிருந்து வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தமிழக பாஜக தலைவர் தமிழசை சௌந்தர்ராஜன், தினகரன் மீது தொடர்ந்து புகார் தெரிவித்து வருகிறார். இன்னொரு பக்கம் திமுக புகார் தெரிவித்து வருகிறது. மற்றொரு புறம் ஓபிஎஸ் அணி புகார் தெரிவித்து வருகிறது. இம்மூன்று தரப்புமே தமிழ்நாடு தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு தினம் தினம் கட்சி அலுவலகம் செல்வது போல சென்று வருகின்றனர்.
இந்நிலையில், திமுகவின் ராஜ்ய சபா எம்.பி திருச்சி சிவா, டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் தினகரன் மீது புகார் மனு கொடுத்துள்ளார். அதில் தமிழகக் காவல்துறையே ஆர்கே நகரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருகிறது என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருச்சி சிவா கூறுகையில், இதற்கு முன்பு நாங்கள் தேர்தல் ஆணையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையிலேயே சில அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இருந்தபோதும் ஆளும் கட்சி, காவல்துறையையே பணப்பட்டுவாடா செய்யப் பயன்படுத்துகிறது. இது தடுக்கப்பட வேண்டும்'' என்று கூறினார்.
ஆர்கே நகரில் பிரச்சாரம் தொடங்கியதிலிருந்து பணப்பட்டுவாடா புகார்கள் கிளம்பிக்கொண்டே இருக்கின்றன. இது ஜனநாயகத்தை இழிவுபடுத்துவதாக உள்ளது என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications