ஆட்சியை இழந்தாலும் தண்ணீர் தரக் கூடாது… மிரட்டும் பாஜக ஈஸ்வரப்பா
பெங்களூரு: ஆட்சியை இழந்தாலும் காவிரியில் இருந்து தண்ணீரை திறந்து விடக் கூடாது என்று பாஜக சட்ட மேலவை எதிர்க்கட்சித் தலைவர் ஈஸ்வரப்பா ஆளும் காங்கிரஸ் கட்சியை மிரட்டியுள்ளார்.
காவிரி பிரச்சனை தொடர்பாக இன்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய சட்ட மேலவை எதிர்க்கட்சி தலைவர் ஈஸ்வரப்பா, தொடர்ந்து தண்ணீர் திறந்துவிடுமாறு உச்சநீதிமன்றம் கூறினாலும் கர்நாடக அரசு அதை ஏற்க முடியாது என்று தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளானாலும் முதலமைச்சருடன் சேர்ந்து சிறை செல்ல தாங்கள் தயாராக இருப்பதாக கூறியுள்ள ஈஸ்வரப்பா, கர்நாடகா அணைகளில் குடிப்பதற்கே தண்ணீர் இல்லாத போது, தமிழகம் அடுத்த சாகுபடிக்கு தண்ணீர் கேட்பது அநியாயம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கர்நாடக முதல்வர் சித்தராமையா, காவிரி பிரச்சனையை சரியாக கையாளவில்லை என்று ஆளும் காங்கிரஸ் கட்சியின் மீது பாஜக தலைவரான ஈஸ்வரப்பா குற்றம்சாட்டியுள்ளார்.