"எங்களுக்கு சிறையில் இருப்பவர் உதவி வேண்டாம்" - மோடியின் பேச்சால் பரபரப்பு
ஹிசார்: "சிறையில் இருப்பவர் உதவி பாஜகவுக்கு வேண்டாம்.. அதை நாங்கள் விரும்பவில்லை" என்று ஹரியானா தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநில சட்டசபைக்கு வரும் 15-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அம்மாநிலத்தின் ஹிசார் பகுதியில் இன்று பாஜகவுக்கு ஆதரவாக பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது மோடி பேசியதாவது:
ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவுக்கு வெற்றி தேடித் தந்த ஹரியானா வீரர்களை மனதார பாராட்டுகிறேன்.

மத்தியில் எங்கள் அரசு மக்கள் ஆதரவுடன் செயல்பட்டு வருகிறது. சிலர் சிறையில் இருந்தபடியே ஹரியானா அரசை நடத்தி விடலாம் என கனவு காண்கின்றனர்.
ஹரியானா மாநில வாக்காளர்கள் அப்படியானவர்களுக்காக வாக்களிப்பார்கள்? தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களின் ஆதரவு எங்களுக்கு தேவையில்லை.
கல்வியறிவு, சுகாதாரம், வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் இந்தியாவிலேயே பின் தங்கிய மாநிலங்களில் முதல் மாநிலமாக இருக்கிறது ஹரியானா.
இதுவரையிலான ஹரியானா அரசுகளால் இந்த மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. நீங்கள் மாற்றத்தை விரும்பினால் எங்களுக்கு வாக்களியுங்கள்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
சவுதாலா
ஹரியானாவின் இந்திய தேசிய லோக்தள் தலைவர் ஓம் பிரகாஷ் சவுதாலா, ஆசிரியர் தேர்வு முறைகேடு ஊழலில் 10 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். சவுதாலவின் லோக் தள் ஆதரவு தங்களுக்கு தேவையில்லை என்பதைக் குறிப்பிடும் வகையிலேயே "சிறையில் இருப்பவர்கள்" ஆதரவு எங்களுக்கு தேவையில்லை என்று மோடி பேசியுள்ளார்.
இருப்பினும் தற்போது அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவும் சிறையில் இருப்பதால் மோடியின் பேச்சு அவரையும் மறைமுகமாக குறிக்கிறதோ என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications