டெல்லியில் கத்தை கத்தையாக 100 ரூபாய் நோட்டுகளுடன் சிக்கிய டாக்டர்
டெல்லி: டெல்லியில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள 100 ரூபாய் நோட்டுக் கட்டுகளை காரில் ஏற்றிய குழந்தைகள் நல டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கறுப்பு பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்ததால் மக்கள் செலவுக்கு சில்லரை இல்லாமல் அல்லாடுகிறார்கள். 100, 50 ரூபாய் நோட்டுகளை பார்த்தால் மக்கள் அடையும் மகிழ்ச்சிக்கு அளவில்லாமல் உள்ளது.

இந்நிலையில் டெல்லியில் உள்ள பஹர்கஞ்ச் பகுதியில் டாக்டர் நல்லல் என்பவர் கட்டுக் கட்டாக 100 ரூபாய் நோட்டுகளை தனது காரில் ஏற்றிக் கொண்டிருந்திருக்கிறார்.
டாக்டர் கட்டுக் கட்டாக பணத்தை காரில் வைப்பதை பார்த்த அந்த வழியாக சென்ற நபர் உடனே போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து தகவல் கொடுத்தார்.
தகவல் கிடைத்தவுடன் போலீசார் வந்து நல்லலை கைது செய்ததுடன் அவர் வைத்திருந்த பணக் கட்டுகளை பறிமுதல் செய்தனர். டாக்டரிடம் இருந்து ரூ. 69 லட்சத்து 86 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தனது தொழில் அதிபர் நண்பர் ஒருவர் பணத்தை தந்ததாகவும், அதை ரஜோரி கார்டனில் உள்ள தனது வீட்டிற்கு எடுத்துச் செல்ல காரில் வைத்ததாகவும் டாக்டர் விசாரணையில் தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் வருமான வரித்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.











Click it and Unblock the Notifications