ஸ்கேன் ரிப்போர்ட்டை நிரூபிக்க... பிறந்த குழந்தையின் பிறப்புறுப்பை வெட்டிக் கொன்ற கொடூர டாக்டர்!
ஸ்கேன் ரிப்போர்ட்டை நிரூபிப்பதற்காக பிறந்த குழந்தையின் பிறப்புறுப்பை வெட்டிக் கொன்ற கொடூர டாக்டரைப் போலீசார் தேர்வி வருகின்றனர்.
ராஞ்சி: ஜார்கண்ட்டில் ஸ்கேன் முடிவிற்கு மாறாக பிறந்த ஆண் குழந்தையின் பிறப்புறுப்பை வெட்டிக் கொன்ற கொடூர டாக்டரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
தாயின் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை பெற்றோருக்குத் தெரியப்படுத்துவது இந்தியாவில் சட்டவிரோதமாகும். இதனால் கருவில் இருக்கும் குழந்தையை சம்பந்தப்பட்டவர்கள் அழித்துவிடும் அபாயம் இருப்பதால், இது தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஸ்கேனில் தவறுதலாகப் பார்த்து குழந்தையின் பாலினத்தை அறிவித்த போலி டாக்டர் ஒருவர், தனது வாதத்தை நிரூபிப்பதற்காக பிறந்த குழந்தையின் பிறப்புறுப்பை வெட்டிக் கொன்ற அதிர்ச்சிகரமான சம்பவம் ஜார்கண்ட்டில் நடந்துள்ளது.

திடீர் பிரசவ வலி:
ஜார்கண்ட் மாநிலத்தின் சத்ரா பகுதியில் வசித்து வருபவர் அனில் பான்டா. இவரது மனைவி எட்டு மாத கர்ப்பிணி. கடந்த சில நாட்களுக்கு முன்னர் அனிலின் மனைவிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. எனவே, அவர் உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

பெண் குழந்தை:
அங்கு அவரை அருண் குமார் என்ற மருத்துவர் பரிசோதித்துள்ளார். பின்னர் அனிலின் மனைவியை மேல்சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அவர் அறிவுறுத்தியுள்ளார். எனவே, அனுஷ் குமார் என்ற மருத்துவரின் மருத்துவமனைக்கு அனிலின் மனைவி அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை சோதித்த அனுஷ், ஸ்கேன் மூலம் வயிற்றில் இருக்கும் குழந்தை பெண் குழந்தை என அனிலிடம் தெரிவித்தார்.

பிரசவம்:
அதோடு, உடனடியாக சிசேரியன் மூலம் குழந்தையை வெளியில் எடுக்க வேண்டும், அப்போது தான் தாய்க்கும், சேய்க்கும் நல்லது என்றும் அனுஷ் தெரிவித்துள்ளார். எனவே, அனிலின் சம்மதத்துடன் அவரது மனைவிக்கு உடனடியாக ஆபரேசன் மூலம் பிரசவம் நடைபெற்றது.

விபரீத முயற்சி:
ஆனால், ஸ்கேன் முடிவுக்கு மாறாக அனிலின் மனைவிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனால் டாக்டர் அனுஷ் அதிர்ச்சியடைந்தார். தனது ஸ்கேன் முடிவு தவறு என்று நினைத்து விடுவார்கள் என அஞ்சிய அவர், உடனடியாக பிறந்த குழந்தையின் பிறப்புறுப்பை வெட்டி அதனை பெண் குழந்தையாக மாற்ற முயற்சித்துள்ளார். இதில் எதிர்பாராதவிதமாக அக்குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

வழக்குப்பதிவு:
இந்த சம்பவத்தினால் அனில் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது தொடர்பாக போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே சம்பந்தப்பட்ட டாக்டர்கள் அனுஷ்குமார் மற்றும் அருண்குமார் இருவரும் தலைமறைவாகினர்.

சட்டவிரோதமாக ஸ்கேன் செண்டர்:
போலீசாரின் விசாரணையில், உரிய அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக அனுஷ் குமாரின் மருத்துவமனையில் அல்ட்ராசவுன்ட் இயந்திரங்களை நிறுவி, கருவில் வளரும் குழந்தை ஆணா?, பெண்ணா? என்று ரகசியமாக சோதனைகளை நடத்தி, கர்ப்பிணி பெண்களிடம் பெரும் தொகையை கட்டணமாக பெற்று வந்தது தெரிய வந்துள்ளது.

மருத்துவமனைக்கு சீல்:
அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது. தலைமறைவாக உள்ள மருத்துவர்கள் அருண் மற்றும் அனுஜை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications