ரூ.4 ஆயிரம் கம்பளிக்கு ஆசைப்பட்டு.. ரூ.40 ஆயிரம் வேலையை இழந்த மருத்துவர்! கொத்தாக தூக்கிய போலீஸ்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் கம்பளி போர்வையை திருடியதாக மாதம் ரூ.40 ஆயிரம் சம்பளம் வாங்கும் மருத்துவர் உட்பட 4 பேரை காவல்துறையினர் துரத்தி பிடித்து கைது செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தின் பரத்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தவர் ராகுல் வால்மீகி.
இந்நிலையில் 4-5 நாட்களுக்கு முன்னர் அவர் தனது வீட்டிற்கு கொண்டு செல்வதற்காக ஒரு பையை மருத்துவமனையில் கொண்டு வந்து வைத்துள்ளார். அங்கு பணியாற்றும் மருத்துவர் சைலேந்திர குமார் என்ன பை இது என விசாரிக்க, வால்மீகி பையிலிருந்து ஒரு அழகான கம்பளியை எடுத்து காட்டியிருக்கிறார்.

கம்பளி
இதை பார்த்த மருத்துவர் கம்பளி என்ன விலை? என்றும் எங்கு வாங்கினீர்கள்? என்றும் கேள்வியெழுப்பியுள்ளார். ஆனால் இதற்கு வால்மீகி சொன்ன பதில்தான் மருத்துவரை வியப்புக்குள்ளாகியது. அதாவது இந்த கம்பளியை தான் வாங்கவில்லை என்றும், திருடியது என்றும் கூறியுள்ளார். கம்பளியை பார்த்ததும் மருத்துவருக்கும் ஆசை வந்துள்ளது. எனவே தனக்காகவும் கம்பளியை திருடி கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்காக சிறிது தொகையும் கொடுப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து திருடுவதற்கு வால்மீகி தனது கூட்டாளிகளுடன் திட்டத்தை தீட்டியுள்ளார். அதன்படி ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்து செல்வது என்பதுதான் திட்டம்.

திட்டம்
திட்டமிட்டவாறு இரண்டு பேரும் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேர்ந்துள்ளனர். ஆனால் மற்றொரு கூட்டாளி ஆளை காணவில்லை. இதனையடுத்து சிறிது நேரத்திற்கு பின்னர் அந்த மூன்றாம் நபர் மருத்துவர் சைலேந்திர குமாருடன் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்துள்ளார். இதனை எதிர்பார்க்காத கூட்டாளிகள் நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள் என்று கேள்வியெழுப்பியுள்ளனர். அதற்கு, "எப்படியிருந்தாலும் எனக்காகதான் கம்பளியை திருட போகிறீர்கள் எனவே ஒரு நல்ல கம்பளியாக பார்த்து திருட வேண்டும். எனவேதான் நானே நேரில் வந்திருக்கிறேன்" என்று மருத்துவர் கூறியுள்ளார். இதனையடுத்து வேறு வழியின்றி மற்ற மூவரும் டாக்டருடன் திருட சென்றுள்ளனர்.

கூச்சல்
முதலில் ரோந்து பணி. எனவே பரத்பூர் முழுவதும் இவர்கள் ரோந்து பணியை மேற்கொண்டுள்ளனர். அப்போது மதுரா கேட் பகுதியில் கம்பளி வியாபாரியின் குடிசை இருந்துள்ளதை கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து இரண்டு பைக்குகளுடன் காவலுக்கு இரண்டு பேர் சாலை ஓரத்தில் நிற்க இருவர் மட்டும் குடிசைக்குள் சென்றுள்ளனர். அங்கு தார்பாய் கொண்டு சுற்றி வைக்கப்பட்டிருந்த கம்பளிகளை உருவியுள்ளனர். ஆனால் கம்பளி வரவில்லை. பின்னர் தார்பாயை கிழித்துள்ளனர். இந்த சத்தம் கேட்டு விழித்த கம்பளி போர்வை விற்பனையாளர் கூச்சலிட்டுள்ளார். இதனையடுத்து இருவரும் தப்பி ஓட கூச்சல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வழித்துக்கொண்டுள்ளனர்.

துரத்தல்
அதற்குள்ளாக தயாராக இருந்த பைக்கில் நால்வரும் அருகில் இருந்த பறவைகள் சரணாலயம் இருக்கும் திசையை நோக்கி பறந்துள்ளனர். ஆனால் ரோந்திலிருந்த காவலர்கள் இதனை பார்த்து சந்தேகமடைந்துள்ளனர். பின்னர் சினிமா பாணியில் காவல்துறையினர் இவர்களை துரத்தியுள்ளனர். அதே நேரத்தில் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர் இரண்டு பக்கங்களிலிருந்து காவலர்கள் இவர்கள் நால்வரையும் மடக்கியுள்ளனர். இதனை எதிர்பாராத திருடர்கள் பைக்கை விட்விட்டு மறைவான இடத்தை நோக்கி ஓடியுள்ளனர். இதில் ஒருவர் மட்டுமே பிடிபட்டுள்ளார். மீதி மூன்று பேரும் தப்பி சென்றுள்ளனர்.
இவரிடமிருந்து 8 கம்பளி போர்வைகள் அடங்கிய 2 மூட்டைகள் கைப்பற்றப்பட்டன. இதனையடுத்து விசாரித்ததில் மற்ற மூவர் குறித்த விவரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. பின்னர் மூவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதில் மருத்துவர் கோட் சூட்டுடன் கைதாகியுள்ளார். கம்பளி போர்வையை திருடிய வழக்கில் மருத்துவர் ஒருவர் கைதாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications