முதல் மனைவி கொலை.. பேஸ்புக்கை ஆயுதமாகப் பயன்படுத்திய கில்லாடி மருத்துவர்!
கொலையை மறைக்க பேஸ்புக் மூலம் நாடகமாடிய மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video

கோரக்பூர்: முதல் மனைவியை மலையில் இருந்து தள்ளி கொலை செய்து விட்டு, அவர் உயிரோடு இருப்பது போல் மற்றவர்களை நம்ப வைக்க ஆறு மாத காலம் அவரது பேஸ்புக் பக்கத்தை பயன்படுத்தி வந்த மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பீகாரச் சேர்ந்த மணிஷ் சின்ஹாவின் மனைவி ராஜேஸ்வரி. கடந்த பிப்ரவரி மாதம் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இருவரும் ஜுன் மாதம் தேனிலவிற்காக நேபாளம் சென்றுள்ளனர். அங்கு போக்ரா மலைக்குகை அருகே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படவே, மனைவியை அங்கேயே விட்டு விட்டு மணிஷ் மட்டும் பீகார் திரும்பினார்.
பின்னர் மனைவியிடம் பேச அவர் பலமுறை செல்போனில் அழைத்துள்ளார். ஆனால் அவர் அழைப்பை ஏற்கவில்லை. இதனால் தொடர்ந்து அவர் கோபத்தில் இருப்பதாக மணிஷ் நினைத்துள்ளார்.

போலீசில் புகார்:
இந்நிலையில் தனது தங்கையைக் காணவில்லை என ராஜேஸ்வரியின் சகோதரன் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் மணிஷ் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் நடந்ததைக் கூறியுள்ளார். அதோடு கடந்த ஆறுமாத காலமாக ராஜேஸ்வரி அவரது பேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து பதிவுகள் வெளியிட்டு வருவதாகவும் கூறியுள்ளார். இதனால் அவர் உயிருடன் இருப்பதாக போலீசாரும் கருதினர். தொடர்ந்து அவரைத் தேடும் பணியையும் அவர்கள் தொடங்கினர்.

சிக்கிய சிக்னல்:
அப்போது அவரது செல்போன் ஆன் ஆனது. செல்போன் சிக்னல் அடிப்படையில் போன் இருந்த பகுதியை போலீசார் கண்டுபிடித்தனர். அதில், ராஜேஸ்வரியின் செல்போனை ஹரியானா மாநிலம் கோரக்பூரின் பிச்சியா பகுதியைச் சேர்ந்த பிரபல சர்ஜரி ஸ்பெசலிஸ்ட் தர்மேந்திர பிரதாப் பயன்படுத்தி வருவது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த வழக்கில் மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டது.

திருமணம்:
தர்மேந்திர பிரதாப் ராஜேஸ்வரியின் முதல் கணவர் ஆவார். தந்தையின் சிகிச்சைக்காக உடனிருந்தபோது, தர்மேந்திராவுடன் ராஜேஸ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது இருவீட்டாருக்கும் தெரியாமல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் தான் தர்மேந்திரா ஏற்கனவே திருமணமானவர் என்பது ராஜேஸ்வரிக்கு தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து தர்மேந்திராவைப் பிரிந்த அவர், அவரது சொத்தில் பங்கு கேட்டு மிரட்டியுள்ளார்.

மிரட்டல்:
இது ஒருபுறம் இருக்க, ராஜேஸ்வரிக்கும் மணிஷுக்கு இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் ஆனபோதும் தொடர்ந்து பணம் கேட்டு தர்மேந்திராவை ராஜேஸ்வரி மிரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவரைத் தீர்த்துக் கட்ட தர்மேந்திரா திட்டம் தீட்டி வந்துள்ளார்.

கொல்ல சதித்திட்டம்:
இந்த சூழ்நிலையில் தான், மணிஷும், ராஜேஸ்வரியும் நேபாளம் சென்றது தர்மேந்திராவுக்கு தெரியவந்தது. நேபாளத்தில் வைத்தே ராஜேஸ்வரியைக் கொலை செய்ய அவர் திட்டமிட்டுள்ளார். இதனால் தன் நண்பர்கள் இருவருடன் போக்ரா மலைப்பகுதிக்கு அவர் சென்றுள்ளார். அங்கு தான் வந்திருப்பதை ராஜேஸ்வரிக்கு அவர் தெரியப்படுத்தியுள்ளார். அதன் தொடர்ச்சியாகத் தான் ராஜேஸ்வரி வேண்டும் என்றே கணவருடன் சண்டையிட்டு அவரை அங்கிருந்து விரட்டியுள்ளார்.

பேஸ்புக் பதிவு:
பின்னர் தர்மேந்திராவைச் சந்திக்க தனியாகச் சென்றுள்ளார் ராஜேஸ்வரி. அங்கு திட்டமிட்டபடி ராஜேஸ்வரியை மது அருந்தச் செய்து, நண்பர்கள் உதவியுடன் அவரை மலையில் இருந்து தள்ளிக் கொலை செய்துள்ளார் தர்மேந்திரா. பின்னர் அவரின் செல்போனை எடுத்துச் சென்ற தர்மேந்திரா, கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக ராஜேஸ்வரியின் பேஸ்புக் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டு வந்துள்ளார். இதன் மூலமாக, ராஜேஸ்வரி உயிருடனே இருந்ததாக இந்த 7 மாத காலம் அனைவரையும் நம்பவைத்துமுள்ளார்.

கூட்டாளிகளுடன் கைது:
இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், தர்மேந்திராவையும், கொலைக்கு ஸ்கெட்ச் போட்டு தந்த அவரது கூட்டாளிகள் இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications