அருண்ஜேட்லி தாக்கல் செய்ய இருந்த பட்ஜெட் ஆவணங்களும் திருட்டு- திடுக் தகவல்!
டெல்லி: மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தாக்கல் செய்ய இருந்த பட்ஜெட் ஆவணங்களும் திருடப்பட்டிருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக பெட்ரோலிய அமைச்சக ஆவணங்களைத் திருடியதாக கைது செய்யப்பட 7 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
டெல்லியில் மத்திய அரசுக்கு சொந்தமான சாஸ்திரி பவனில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சக அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இந்த அமைச்சகத்தின் அலுவலகத்தில் தனிச்செயலாளர் ராஜீவ் குமார், இணைச்செயலாளர்கள் சந்தீப் பவுண்ட்ரிக், யு.பி.சிங், இயக்குனர்கள் நளின்குமார், ஸ்ரீவஸ்தவா உள்ளிட்டவர்களின் அறைகளில் திருட்டுத்தனமாக புகுந்து, பெட்ரோலிய பொருட்கள் விலை நிர்ணயம், வரி விதிப்பு, இறக்குமதி உள்ளிட்டவை தொடர்பான ரகசிய ஆவணங்களை திருடி, நகல் எடுத்து, முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்கப்பட்டிருப்பதாக நேற்று முன்தினம் தகவல் வெளியானது.
இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஆவண திருட்டில் அந்த அமைச்சகத்தின் கீழ்நிலை ஊழியர்கள் அஷாராம், ஈஸ்வர் சிங் மற்றும் இடைத்தரகர்களாக செயல்பட்ட லால்தா பிரசாத், ராகேஷ் குமார், ராஜ்குமார் சவுபே என 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் டெல்லி போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையை தொடர்ந்து, கன்னாட் பிளேஸ் என்ற இடத்தில் அமைந்துள்ள பல்வேறு கட்டிடங்களில் உடனடியாக அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் கட்டிடமும் அடக்கம்.
கைது செய்யப்பட்ட 5 பேரையும் நேற்று பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சக அலுவலகத்தில் அவர்கள் ஆவணங்களை திருடிய உயர் அதிகாரிகளுடைய அறைகளுக்கு போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
இதனிடையே இந்த சம்பவத்தில், எரிசக்தி ஆலோசகர்கள் என்று அழைக்கப்படுகிற 2 பேரை டெல்லி போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்கள், கன்சல்டன்சி நிறுவனம் நடத்தி வருகிற பிரவாஸ் ஜெயின், இணைய தளம் நடத்தி வருகிற முன்னாள் பத்திரிகையாளர் சாந்தனு சைக்கியா ஆகியோர் ஆவார்கள். இவர்கள் இருவரும்தான் ரகசிய ஆவணங்களை வாங்கி, முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்பனை செய்திருக்கிறார்கள் என தெரிய வந்துள்ளது.
ரகசிய ஆவணங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சப்ளை செய்து வந்த இவர்களிடம் இருந்து நிலக்கரி, மின்சாரம் மற்றும் பிற துறை அமைச்சக ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, வரும் 28-ந் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கும் மத்திய பட்ஜெட் உரைக்கான ரகசிய குறிப்புகள் அடங்கிய ஆவணங்களும் சிக்கியுள்ளதாக நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பிரதமர் அலுவலகத்தின் முதன்மைச்செயலாளர் நிருபேந்திர மிஸ்ரா எழுதிய ஒரு கடிதமும் கைப்பற்றப்பட்டிருப்பதாக இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆவண திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்தும், அவர்களது அலுவலகங்கள், வீடுகளில் இருந்தும் 2 கோணிப்பைகள் நிறைய ஆவணங்களை டெல்லி போலீசார் கைப்பற்றி உள்ளனர்.












Click it and Unblock the Notifications