மாநிலங்களுக்கு தந்த நிதி உங்கள் மாமா வீட்டில் இருந்தா வந்தது? ராகுல் மீது மோடி தாக்கு
ராய்ப்பூர்: மத்திய அரசால் மாநிலங்களுக்கு தரப்பட்ட நிதி உங்கள் மாமா வீட்டில் இருந்து வந்ததா என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
சத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கான 2-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தின் போது மோடி பேசியதாவது:
ஊழலில் காங்கிரஸ் கட்சி டாக்டர் பட்டம் பெற்று உள்ளது. காங்கிரஸ் கட்சி நாட்டுக்கு சுமை ஆகிவிட்டது. எனவே காங்கிரஸ் ஆட்சியை அகற்ற வேண்டும்.

காங்கிரஸ் கட்சி, தேர்தல் கருத்துக்கணிப்புக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. அடுத்த ஆண்டில் நடைபெற இருக்கும் லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை பிடிக்கப் போகிறது. தேர்தலில் தோற்று விடுவோம் என்பதால்தான் கருத்துக்கணிப்புகளுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது.
சோனியா அம்மையாரும், இளவரசர் ராகுலும் இங்கே வந்தனர். இந்த மாநிலத்துக்கு ஏராளமான உணவு தானியங்களும், நிதியும் கொடுக்கப்பட்டதாக கூறினார்கள். மக்களே, நீங்கள் என்ன பிச்சைப் பாத்திரம் ஏந்திக்கொண்டா நிற்கிறீர்கள்? காங்கிரஸ் என்ன பேசிக்கொண்டிருக்கிறது?
நான் இளவரசர் ராகுலை கேட்க விரும்புகிறேன். மாநிலங்களுக்கு நீங்கள் நிறைய நிதி கொடுத்தோம் என கூறி வருகிறீர்கள். இந்தப் பணம் என்ன உங்கள் மாமா வீட்டில் இருந்தா வந்தது? இது மக்களின் பணம் அல்லவா?
சோனியா அம்மையாரே, உங்களுக்கு உடல் நலமில்லை. கட்சியை இளவரசர் ராகுலிடம் ஒப்படைத்து விடுங்களேன் என்றார்.












Click it and Unblock the Notifications