உத்தரகாண்ட்டில் பேரவலம்.. எரிந்த நிலையில் நதிகளில் கரை ஒதுங்கும் உடல்கள்.. கடித்து குதறும் நாய்கள்
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாஷியில் பாகீரதி நதிக்கரையில் மனித உடல்களை நாய்கள் கடித்து குதறும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இந்தியாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மனித உணர்வுகளை பெருமளவு காயப்படுத்திவிட்டது.

நதிகளில் மிதந்த சடலங்கள்
பொதுவாக நமது நாட்டில் ஒருவர் உயிரிழந்தால் அந்த நபரின் மத சடங்குகளுக்கு ஏற்ப இறுதி சடங்குகள் செய்வது வழக்கம். ஆனால் இந்த கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களை உரிய மரியாதையுடன் வழியனுப்பி வைக்க முடியாத சூழ்நிலை பல்வேறு இடங்களில் நிலவியது. புனித நதி என்று கருதப்படும் கங்கை, யமுனை நதிகளில் சடலங்கள் தொடர்ந்து மிதந்து வந்தன.

நாய்கள் கடித்து குதறின
இந்த நிலையில் உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாஷியில் பாகீரதி நதிக்கரையில் உள்ள கேதர் காட்டில் நாய்கள் மனித உடல்களை கடித்து குதறும் கோர வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக பாகீரதி நதியின் நீர்மட்டம் அதிகரித்த பின்னர் பாதி எரிந்த நிலையில் இருக்கும் உடல்கள் கரை ஒதுங்கியதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.

கண்டுகொள்ளாத அதிகாரிகள்
இந்த பாதி நிலையில் எரிந்த உடல்களை நாய்கள் கடித்து குதறுவதாகவும், இவை கொரோனவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களாக இருக்கலாம் என சந்தேகப்படுவதாகவும், தொற்று பரவாமல் இருக்க மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சியும் உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

நகராட்சி தலைவர் மறுப்பு
ஆனால் இதை மறுத்துள்ள நகராட்சித் தலைவர் ரமேஷ் செம்வால், 'உள்ளூர் மக்களிடமிருந்து புகார்களைப் பெற்ற பின்னர், கேதர் காட்டில் நதிக் கரையோரம் ஒதுங்கும் உடல்களை தகனம் செய்ய ஒரு நபரை நியமித்து இருக்கிறேன்' என்று கூறினார். உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,156 பேருக்கு புதிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications