வேலைக்கார பெண் மர்ம மரணம்- பகுஜன் எம்.பி.யின் மனைவி கைது
டெல்லி: வேலைக்கார பெண் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் மரணமடைந்த விவகாரத்தில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. தனஞ்செய்சிங்கின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தனஞ்செய்சிங் எம்.பி, டெல்லி சாணக்யபுரி பகுதியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் கடந்த 10 மாதங்களாக பணிபுரிந்த இளம்பெண் தலை மற்றும் வயிறு பகுதிகளில் கடுமையான காயங்களுடன் நேற்று காலை உயிரிழந்திருக்கிறார்.
இது தொடர்பாக நேற்று இரவுதான் அப்பெண்ணின் உறவினர்கள் போலீசில் புகார் தெரிவித்திருக்கின்றனர். அப்பெண் கூரிய ஆயுதங்களால் கடுமையான சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பாக தனஞ்செய்சிங்கின் மனைவி ஜக்ரிதி சிங் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த தனஞ்செய்சிங் எம்.பி, 3 நாட்களுக்கு முன்பு என் மனைவி போனில் அழைத்தார். வீட்டின் மேற்கூரையில் இருந்து அப்பெண் விழுந்துவிட்டதாக தெரிவித்தார். பின்னர் நேற்று மாலை மீண்டும் என் மனைவி போனில் கூப்பிட்டார்.. அப்பெண் இறந்துவிட்டதாக தெரிவித்தார். நான் என் தொகுதியில் இருந்து உடனே டெல்லிக்கு விரைந்து வந்தேன் என்றார்.
தனஞ்செய்சிங் எம்.பி. வீட்டில் பணிபுரியும் இதர வேலைக்காரர்களிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications