முலாயம்சிங்குடனான உறவு சீர்குலைந்ததற்கு ஜெயா பச்சனே காரணம்: அமர்சிங்
டெல்லி: சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவுடனான உறவு சீர்குலைய ஜெயா பச்சனே காரணம் என்று ராஜ்யசபா எம்.பி. அமர்சிங் கூறியுள்ளார்.
சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவின் மிக நெருங்கிய நண்பராக இருந்தவர் அமர்சிங். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முலாயம்சிங் யாதவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சமாஜ்வாடி கட்சியில் இருந்து அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
பின்னர் அஜித்சிங்கின் ராஷ்டிரிய லோக் தள் கட்சியில் அவரும் ஜெயப்பிரதாவும் இணைந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக உத்தரப்பிரதேசத்தில் பூங்கா ஒன்றின் திறப்பு விழாவுக்காக அமர்சிங்கை முலாயம்சிங் அழைத்திருந்தார். அமர்சிங்கும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது முதலே அவர் மீண்டும் சமாஜ்வாடி கட்சியில் இணைவார் என்று கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ள அமர்சிங், முலாயம்சிங் என்னை தொடர்பு கொண்டு எதை செய்ய வேண்டும் என்று சொன்னாலும் நான் செய்வேன். எனக்கும் அவருக்கும் இடையே ஜெயா பச்சன் தூதராக செயல்பட்டதில் இருந்தே பிரச்சனை வரத் தொடங்கிவிட்டது. அவரால்தான் பிரச்சனையே வந்தது.
எனக்கும் முலாயம்சிங் யாதவுக்குமான உறவை சீர்படுத்த ஜெயாபச்சன் ஒன்றும் புரோக்கராக செயல்பட தேவையில்லை. முலாயம்சிங் யாதவுடன் இணைந்து சமூக சேவைக்காகத்தான் லக்னோ நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அந்த நிகழ்ச்சியை அரசியலாக்க வேண்டாம் என்றார்.












Click it and Unblock the Notifications