5 காசுக்காக நடத்தப்பட்ட வழக்கின் செலவு ரூ. 47,795
டெல்லி: கடந்த 41 ஆண்டுகளுக்கு முன்னர் பயணி ஒருவரிடம் ஐந்து பைசா குறைவாக டிக்கெட் பணம் வாங்கியதாக நடத்துனர் ஒருவர் மீது தொடரப்பட்ட வழக்கின் செலவு தற்போது நாற்பதாயிரத்தைத் தாண்டியுள்ளதாக டெல்லி போக்குவர்த்து கழகம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கடந்த 1973ம் ஆண்டு டெல்லி போக்குவரத்துக் கழகத்தில் (டி.டி.சி.) பணியாற்றிய நடத்துனர் ரன்பீர் சிங் என்பவர் பயணி ஒருவரிடம் 15 காசு மதிப்புள்ள டிக்கெட்டிற்கு 10 காசு மட்டுமே பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து துறை ரீதியாக நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த 1976ம் ஆண்டு பதவியிலிருந்து நீக்கப்பட்டார் ரன்பீர். இதற்கு எதிராக தொழிலாளர் நல நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் ரன்பீருக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப் பட்டது.

உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கிலும் ரன்பீருக்கும் சாதகமான தீர்ப்பே கிடைத்தது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் டி.டி.சி. சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதன் விசாரணை வரும் ஜனவரி 19ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக செலவிடப்பட்ட தொகை குறித்து விசாரணையின் போது உயர்நீதிமன்ற நீதிபதி ஹிமா கோஹ்லி கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்குப் பதிலளித்த டி.டி.சி. இந்த வழக்குத் தொடர்பாக இதுவரை ரூ. 47,795 செலவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications