டெல்லியில் பெரும் புழுதிக்காற்று - அனல் குறைந்தாலும் அவதியில் மக்கள்!
டெல்லி: டெல்லியில் இன்று பிற்பகலில் பெரும் புழுதிக் காற்று வீசியதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
டெல்லியில் கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டி வதைத்து வந்தது.இந்நிலையில் இன்று பிற்பகல் 2 மணி அளவில் கடுமையான புழுதி புயல் வீசியது. இதனால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகளும் பொது மக்களும் மிகுந்த அவதி அடைந்தனர்.
இந்த கடுமையான புழுதி புயலால் டெல்லியில் உள்ள முக்கியமான சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்புத்தது. புழுதி புயலால் சாலை ஓரத்தில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தன.
வேகமாக வீசிய காற்று சாலையோரம் கிடந்த மண்ணை வாரி தெளித்ததால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர். இதை தொடர்ந்து சுமார் 3 மணியளவில் சில இடங்களில் லேசான மழையும் பெய்ததால் டெல்லிவாசிகள் ஓரளவுக்கு அனலில் இருந்து விடுபட்டனர்.
சில இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டது. டெல்லியில் வீசிய இந்த புழுதி புயலால் மக்கள் வீடுகளில் முடங்கி போய் உள்ளனர். புழுதி புயலால் டெல்லியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.