டெல்லி வரை வந்துவிட்டது 'எபோலா' பீதி: தீவிர கண்காணிப்பில் 3 பேர்
டெல்லி: ஆட்கொல்லி எபோலா வைரஸ் பீதி டெல்லியை அடைந்துள்ளது. எபோலா வைரஸ் தாக்கியுள்ளதா என்பதை தெரிந்து கொள்ள துவாரகாவைச் சேர்ந்த 3 பேர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
தென்மேற்கு டெல்லியில் உள்ள துவாரகாவைச் சேர்ந்த ஒருவர் ஆப்பிரிக்க நாடான கானாவில் இருந்து விமானம் மூலம் டெல்லி வந்தார். அவர் வந்த விமானத்தில் ஒருவருக்கு எபோலா வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த டெல்லிக்காரர் மற்றும் அவரது குடும்பத்தார் இருவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 21ம் தேதியில் இருந்து தீவிர கண்காணிப்பில் உள்ள அவர்களுக்கு இதுவரை எபோலா நோயின் அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. எபோலா வைரஸ் தாக்கினால் அறிகுறிகள் தெரிய 2 முதல் 21 நாட்கள் வரை ஆகலாம்.
கண்காணிப்பில் உள்ள அந்த நபர் கானா தலைநகர் அக்ராவில் இருந்து எதியோபியாவில் உள்ள அடிஸ் அப்பாவுக்கு சென்றுவிட்டு அங்கிருந்து டெல்லிக்கு வந்தார். கானா மற்றும் எதியோபியாவில் இதுவரை யாருக்கும் எபோலா வைரஸ் தாக்குதல் இல்லை.
எபோலா வைரஸ் தாக்கினால் 90 சதவீதம் மரணத்தில் முடியும். மேலும் இந்த நோய்க்கு இதுவரை மருந்து எதுவும் கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications