டிடிவி தினகரனை கஸ்டடியில் எடுக்கிறது போலீஸ்? அடுத்து விவேக் ஜெயராமனுக்கு 'காப்பு' ரெடி
கைது செய்யப்பட்டுள்ள டிடிவி தினகரனை கஸ்டடியில் எடுக்க டெல்லி போலீஸ் திட்டமிட்டுள்ளது. இவரைத் தொடர்ந்து விவேக் ஜெயராமனை தூக்கவும் டெல்லி திட்டமிட்டுள்ளது.
டெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சசிகலா அக்கா மகன் டிடிவி தினகரனை டெல்லி போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க உள்ளனர்.
நாட்டையே அதிரவைக்கும் வகையில் இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்ததாக கைது செய்யப்பட்டுள்ளார் அதிமுக (அம்மா) கட்சியின் துணை பொதுச்செயலர் தினகரன். இவரது சித்தியும் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலருமான சசிகலா ஏற்கனவே வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

ஒதுக்கி வைப்பு
அத்துடன் அதிமுக எனும் மாபெரும் இயக்கத்தில் இருந்து சசிகலா, தினகரன் உள்ளிட்டோர் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் இவர்களுக்கு கட்சி ஆதரவு எதுவும் இல்லை.

போலீஸ் கஸ்டடி
இப்படி சசிகலா குடும்பமே குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிறைவாசம் அனுபவித்து வருகிறது. இந்த நிலையில் டிடிவி தினகரனை டெல்லி போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளது.

வருமான விவரங்கள்
இந்த விசாரணையின்போது ஜெயலலிதாவின் சொத்துகள், அது தொடர்பான ஆவணங்கள், சசிகலா குடும்பத்தின் சொத்துகள், பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணம், மிடாஸ் சாராய ஆலையின் வருமானம், இப்போது சசிகலா குடும்பத்தின் நிதி நிர்வாகத்தை யார் பார்ப்பது என்பது உள்ளிட்ட விவரங்களை தினகரனிடம் இருந்து 'கறந்து'விடுவது என்பதில் டெல்லி போலீஸ் மும்முரமாக இருக்கிறதாம்.

விவேக் சிக்குகிறார்
தற்போது சசிகலா குடும்பத்தின் நிதி நிர்வாகத்தை முழுமையாக கவனித்து வருவது இளவரசி மகன் விவேக் ஜெயராமன்தான். இதனால் சசிகலா, தினகரனைத் தொடர்ந்து விவேக் ஜெயராமனைத் தூக்கவும் டெல்லி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications